கோலாலம்பூர், ஏப் 8- தலைநகரில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஆறு துப்பாக்கிகள் மற்றும் 200 தோட்டாக்களுடன் கடந்த மாதம் 27ஆம் தேதி பிடிபட்ட இஸ்ரேலிய ஆடவர் இவ்வாரம் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தகவல்களைப் பெறுவதற்காக மீது தமது தரப்பு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருவதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருடின் ஹூசேன் கூறினார்.
அந்த ஆடவர் ஆறு கைத்துப்பாக்கிகளை வைத்திருந்ததற்கான உண்மையான காரணத்தைக் கண்டறிய நாங்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம். அந்த இஸ்ரேலிய ஆடவருக்கு எதிராக இந்த வாரத்தில் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப் படலாம். நோன்புப் பெருநாளுக்கு பிறகு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப் படலாம் என அவர் தெரிவித்தார்.
இங்குள்ள கோலாலம்பூர் போலீஸ் பயிற்சி மையத்தில் சாலை போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை இயக்குநரின் பணி ஏற்பு மற்றும் பணி ஒப்படைப்பு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதனிடையே, அந்த இஸ்ரேலிய ஆடவருக்கு துப்பாக்கிகளை விநியோகித்தது தொடர்பில் கடந்த மாதம் 29 ஆம் தேதி கோல சிலாங்கூர் ரமலான் சந்தையில் கைது செய்யப்பட்ட 42 மற்றும் 40 வயதுடைய தம்பதியர் மீது இன்று கிள்ளான் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப் படும் என அவர் சொன்னார்.


