காஸா நகர், ஏப் 5- கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் காஸா
தீபகற்பம் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் தாக்குதல்களில் 33,037
பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியிலுள்ள
சுகாதார அமைச்சு கூறியது.
மேலும், இந்த தாக்குதல்களில் 75,668 பேர் காயமடைந்துள்ளதாக
அமைச்சின் அந்த அறிக்கையை மேற்கோள் காட்டி அனாடோலு ஏஜென்சி
செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் 62 பேர்
கொல்லப்பட்டதோடு மேலும் 91 பேர் காயமடைந்தனர் என்று அது
தெரிவித்தது.
மேலும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியுள்ள நிலையில் அவர்கள்
இருக்குமிடங்களை அடைய முடியாத நிலையில் மீட்புப் பணியாளர்கள்
உள்ளனர்.
காஸா தீபகற்பம் மீது இஸ்ரேலியப் படைகள் தாக்குதலைத் தொடங்கி
நேற்றுடன் 181 நாட்கள் ஆன நிலையில் சுமார் 85 விழுக்காட்டு காஸா
மக்கள் தங்கள் குடியிருப்புகளை இழந்துள்ளனர். மேலும் உணவு,
சுத்தமான குடிநீர் மற்றும் மருந்துகள் இன்றியும் அவர்கள் அவதியுற்று
வருகின்றனர். அந்த பிராந்தியத்திலுள்ள 60 விழுக்காட்டு கட்டுமானங்கள்
மோசமாக சேதமடைந்தன அல்லது முற்றாக அழிந்து விட்டன என்று
ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது.
இஸ்ரேல் இனப்படுகொலையை நிகழ்த்துவதாக கடந்த வாரம்
குற்றஞ்சாட்டிய அனைத்துலக நீதிமன்றம் (ஐ.சி.ஜே.), காஸாவில்
பஞ்சத்தைத் தீர்க்க நடவடிக்கை எடுக்குமாறு அந்நாட்டை வலியுறுத்தியது.


