கோலாலம்பூர், ஏப் 3: இந்த ஆண்டு ஐடில்பித்ரியை முன்னிட்டு ஹென்றி கர்னி பள்ளி மற்றும் அனைத்து சிறைகள், புனர்வாழ்வு மையங்கள், சிறப்பு மறுவாழ்வு மையங்கள், சிறப்பு தடுப்பு மையங்களிலுள்ள சிறைக் கைதிகளின் குடும்பங்கள் மூன்றாவது மற்றும் நான்காவது ராயா நாட்களில் விஜியம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதில் முஸ்லிம் கைதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், சிறைக் கைதிகளைக் குடும்பத்தினர் ஒரு முறை மட்டுமே சந்திக்க அனுமதிக்கப் படுவதாகவும் சிறைச்சாலை துறை இன்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
நேரில் காணும் முறை மட்டும் அல்லாமல் ஏப்ரல் 14 முதல் 16 வரை இணைய சந்திப்புகளும் (வீடியோ அழைப்புகள்) அனுமதிக்கப் படுகின்றன.
நேரில் சந்திக்கும் முறையைத் தேர்ந்தெடுக்கும் குடும்பங்களுக்கான பார்வையிடும் நேரம் காலை 8.15 மணி முதல் மாலை 4.15 மணி வரை ஆகும் மற்றும் அவர்கள் RT-PCR அல்லது ARTK-Ag சோதனை (ஸ்வாப்/எச்சில்) மேற்கொள்ளுதல் போன்ற நிபந்தனைகளுக்கு இணங்க வேண்டும்.
"கூடுதலாக, பார்வையாளர்கள் சிறைச்சாலைச் சட்டம் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டுள்ளனர். இது பார்வையாளர்கள் சிறைக்குள் நுழையும் போது மற்றும் வெளியேறும் போது உடல் பரிசோதனைகளை நடத்த சிறை அதிகாரிகளை அனுமதிக்கிறது" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், www.prison.gov.my (i-Visit ) இணைத்தளம் , தொலைபேசி அழைப்புகள் மற்றும் மின்னஞ்சல்கள் அல்லது சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்குக் கடிதங்கள் மூலம் முன்பதிவு செய்த பார்வையாளர்களுக்கு மட்டுமே சந்திப்பு வருகைகள் அனுமதிக்கப்படும் என்று சிறைச்சாலைகள் துறை தெரிவிக்கிறது.
"முன்பதிவு செய்யப்பட்ட பிறகு, சந்திப்பின் தேதி மற்றும் நேரத்தை நிறுவனம் முடிவு செய்யும்" என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– பெர்னாமா


