கோலாலம்பூர், ஏப் 3 - அரசாங்க வாகனங்களைப் பராமரிக்கும் 390 கோடி வெள்ளி மதிப்புள்ள குத்தகையை தனது நிறுவனம் பெறுவதற்காக நிதியமைச்சை ஏமாற்றியதாக ஸ்பென்கோ சென். பெர்ஹாட் நிறுவனத்தின் தலைவர் டான்ஸ்ரீ ரோபர்ட் டான் ஹூவா சூன் மீது இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிபதி சுஸானா ஹூசேன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது 83 வயதான டான் தன் மீதான குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரினார். நான் குற்றச்சாட்டை புரிந்து கொண்டேன். நான் குற்றச்சாட்டை மறுக்கிறேன் என்று அவர் சொன்னார்.
‘மலேசிய அரசாங்கத்திற்கு வாகனங்களை விநியோகிப்பது, பழுதுபார்ப்பது, பராமரிப்பது மற்றும் நிர்வகிப்பது‘ ஆகிய பணிகளுக்கான விண்ணப்ப பரிந்துரை எனும் தலைப்பிலான டெண்டர் குழுவை தவறாக வழி நடத்தியதன் மூலம் நிதியமைச்சை ஏமாற்றியதாக டான்ஸ்ரீ டான் குற்றச்சாட்டை எதிர் நோக்கியுள்ளார்.
இணைப்பு IV (இணைப்பு i) ஏலதாரர் சுயவிபரம் என்ற தலைப்பிலான ஆவணத்தின் மூலம் ஸ்பான்கோவில் 30 விழுக்காட்டு பூமிபுத்ரா பங்குரிமை தொடர்பானது. இதன் வழி 396 கோடியே 53 லட்சத்து 86 ஆயிரத்து 628 வெள்ளி மதிப்பிலான அரசாங்க வாகன விநியோகம், பழுதுபார்ப்பு, பராமரிப்பு மற்றும் நிர்வாக குத்தகையைப் பெறுவதற்கு நிதியமைச்சிடம் நேர்மையற்ற முறையில் ஆதிக்கம் செலுத்தியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.


