குவாந்தான், ஏப் 4 - இங்குள்ள சுங்கை ஈசாப் கே.கே.மார்ட் கிளையில்
கடந்த சனிக்கிழமை நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டுத் தாக்குதலில் ஒரு
நபர் மட்டுமே சம்பந்தப்பட்டுள்ளதாகப் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவ இடத்திலிருந்து பெறப்பட்ட கண்காணிப்பு கேமரா பதிவுகளின்
அடிப்படையில் இந்த தகவல் கிடைக்கப் பெற்றதாக குவாந்தான் மாவட்ட
போலீஸ் தலைவர் ஏசிபி வான் முகமது ஜஹாரி வான் பூசு கூறினார்.
சந்தேகப்பேர்வழியைக் கைது செய்வதற்கான நடவடிக்கை தீவிரமாக
மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அச்சம்பவம் தொடர்பான விசாரணைக்காக
இதர கண்காணிப்பு கேமராக்களையும் சோதனை செய்து வருகிறோம்
என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்றிரவு இங்குள்ள டத்தாரான செகிலாவ் நோன்புப் பெருநாள் சந்தையில்
நடைபெற்ற குற்றச் செயல் தடுப்பு இயக்கத்திற்குப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனை தெரிவித்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 435வது பிரிவின் கீழ்
விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறிய அவர், இதன் தொடர்ப்பில் தகவல்
அறிந்தவர்கள் காவல் துறையுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்
கொண்டார்.
சுங்கை ஈசாப்பில் உள்ள கே.கே.மார்ட் கிளை மீது அடையாளம் தெரியாத
நபர் கடந்த சனிக்கிழமை மேற்கொண்ட பெட்ரோல் குண்டுத் தாக்குதலில்
அக்கடையின் ஒரு பகுதி சேதமடைந்தது.


