குவாந்தான், ஏப் 3 - கே.கே.மார்ட் சுங்கை ஈசாப் கிளையில் கடந்த
சனிக்கிழமை நடத்தப்பட்ட பெட்ரோல் குண்டு வீச்சுத் தாக்குதல்
தொடர்பில் பகாங் போலீசார் நால்வரிடம் வாக்குமூலம் பதிவு
செய்துள்ளனர்.
அந்த நால்வரில் புகார்தாரர் மற்றும் சம்பவத்தை கண்ட சாட்சிகளும்
அடங்குவர் என்று பகாங் மாநில போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ யாஹ்யா
ஓத்மான் கூறினார்.
சந்தேகப் பேர்வழிகளை அடையாளம் காணும் நடவடிக்கை தொடர்ந்து
மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் இந்த விசாரணைக்கு உதவும்
பொருட்டு சம்பவ இடத்தின் அருகிலிருந்த கண்காணிப்பு கேமராக்களின்
பதிவுகளை தாங்கள் பெற்றுள்ளதாகவும் அவர் சொன்னார்.
பகாங் மாநிலத்தில் 15 கே.கே.மார்ட் கடைகளும் இரு பொருள் சேமிப்பு
கிடங்குகளும் உள்ளன. கே.கே.மார்ட் கிளைகள் உள்ள பகுதிகளில்
கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தும்படி போலீஸ் ரோந்துப்
பிரிவினருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்று அவர் தெரிவித்தார்.
நேற்று இங்குள்ள மக்கோத்தா சதுக்க ரமலான் சந்தையில் குற்றச் செயல்
தடுப்பு இயக்கத்தை தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர்
இதனைக் கூறினார்.
பொது மக்கள் அமைதி காக்கும் அதேவேளையில் அவர்கள்
தன்னிச்சையாக எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்பதோடு
எப்போதும் சட்டத்தை மதித்தும் நடக்க வேண்டும் என்றும் அவர்
வலியுறுத்தினார்.
சுங்கை ஈசாப் கே.கே.மார்ட் கிளையில் கடந்த மார்ச் 30ஆம் தேதி
சனிக்கிழமை அனாமதேய நபர் ஒருவர் நடத்திய பெட்ரோல் குண்டுத் தாக்குதலில் அந்த கடையின் பொருள் வைக்கும் தடுப்புகளும் சில பொருள்களும் சேதமடைந்தன.


