லஹாட் டத்து, ஏப் 2- பதினேழு வயது நிரம்பிய தொழில்கல்வி மாணவர்
ஒருவரை கடந்த மாதம் படுகொலை செய்ததாக 13 இளையோர் மீது
இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
இந்த வழக்கு உயர் நீதிமன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது
என்பதால் குற்றஞ்சாட்டப்பட்டவர்களிடம் ஒப்புதல் வாக்மூலம்
பெறப்படவில்லை.
கடந்த மார்ச் மாதம் 21 மற்றும் 22ஆம் தேதிக்கு இடையே இரவு 9.00
மணிக்கும் மறுநாள் காலை 7.38 மணிக்கும் இடையே லஹாட் டத்து
தொழில்கல்வி கல்லூரியின் மாணவர் தங்கும் விடுதியில் முகமது நஸ்மி
அஜிசாட் அஸ்வான் என்ற மாணவரை படுகொலை செய்ததாக 16 முதல்
19 வயது வரையிலான அம்மாணவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவருக்கும் எதிராக தண்டனைச் சட்டத்தின் 302வது பிரிவு
மற்றும் அதே சட்டத்தின் 34வது பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இப்பிரிவின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப்படுவோருக்கு மரண
தண்டனை அல்லது 30 முதல் 40 ஆண்டுகள் வரையிலான
சிறைத்தண்டனை மற்றும் 12 பிரம்படி வரை விதிக்கப்படும்.
இந்த வழக்கு பதின்ம வயதினரை உட்படுத்திய காரணத்தால் வழக்கு
விசாரணையின் போது பொதுக்கள் அனுமதிக்கப்படவில்லை.
மாஜிஸ்திரேட் நுர் அஷ்ராப் ஜோல்ஹானி முன்னிலையில் காலை 9.00
மணியளவில் வழக்கு தொடங்கிய போது குற்றஞ்சாட்டப்பட்டவர்களின்
குடும்ப உறுப்பினர்கள் மட்டும் நீதிமன்றத்தில் இருந்தனர்.
அரசு தரப்பில் துணை பப்ளிக் புரோசிகியூட்டர் இங் ஜூன் தியோ வழக்கை
நடத்தும் வேளையில் குற்றஞ்சாட்டப்பட்ட இருவரின் சார்பில் அமிருள்
அமின் ரஷிட் மற்றும் கமாருடின் முகமது சின்கி ஆகியோர்
ஆஜராகின்றனர். இதர 11 பேரை பிரதிநிதித்து யாரும் ஆஜராகவில்லை.
இரசாயன அறிக்கை மற்றும் சவப்பரிசோதனை அறிக்கையைப்
பெறுவதற்கு ஏதுவாக இந்த வழக்கு விசாரணையை எதிர்வரும் மே 16ஆம்
தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்தது.


