ஷா ஆலம், ஏப் 1 - விற்பனை மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதற்கு ஏதுவாக சிலாங்கூர் அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (எம்.எஸ்.எம்.இ.) இலக்கவியல உருமாற்றத்திற்குத் தொடர்ந்து உதவும்.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, ரமலான் சந்தைகளில் ரொக்கமில்லா பரிவர்த்தனை முறையை ஊக்குவிப்பதற்காக பிளாட்ஃபார்ம் சிலாங்கூர் அல்லது பிளாட்ஸ் மூலம் 10 வெள்ளி மதிப்பிலான டிஜிட்டல் ரஹ்மா கூப்பன்கள் பொது மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
நேற்று செக்சன் 3, பண்டா பாரு பாங்கி சந்தையில் வருகையாளர்களுக்குக் கூப்பன்களை விநியோகித்த பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த முயற்சி குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் தங்கள் வணிக நடவடிக்கைகளை இலக்கவியல் மயமாக்க உதவுவதற்கான ஒரு ஊக்குவிப்பாகும்.
இதுவரை மொத்தம் 20,000 சிறு வணிகர்கள் மற்றும் வியாபாரிகள் பிளாட்சில் இணைந்துள்ளனர்.
குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையினர் தங்கள் வணிகங்களை இலக்கவியலுக்கு மாற்றுவதில் சிலாங்கூர் அரசாங்கம் தொடர்ந்து உதவியளிக்கும் என்று அவர் நேற்றிரவு சமூக ஊடக தளமான எக்ஸ் பதிவில் கூறினார்.
டிஜிட்டல் ரஹ்மா கூப்பன்கள் விநியோகம் என்பது பிளாட்சின் 'மாசோக் பஸார்' பிரச்சாரத்தின் ஒரு பகுதியாகும். இது ரொக்கமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நோக்கில் மாநிலம் முழுவதும் எட்டு இடங்களில் நடத்தப்படுகிறது.
முன்னதாக, எம்.பி.ஐ. எனப்படும் மந்திரி புசார் கழகம் இந்தப் பிரச்சாரத்தின் வெற்றியை உறுதி செய்வதற்காக 40,000 ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தது
கோவிட்-19 தொற்றுநோய் பரவியதைத் தொடர்ந்து, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையினர் தங்கள் வணிகத்தை இலக்கவியல் மயமாக்குவதற்கு உதவுவதற்காகக் கடந்த 2020 ஆம் ஆண்டு ரமலான் மாதத்தில் பிளாட்ஸ் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.


