பாசீர் சாலாக், ஏப் 1- எதிர்காலத்தில் அமல் செய்வதற்கு அரசாங்கம்
உத்தேசித்துள்ள இலக்கிடப்பட்ட மானியத் திட்ட அமலாக்கம் அந்நிய
முதலீடுகளைப் பாதிக்காது என்று முதலீடு,வர்த்தகம் மற்றும் தொழிலியல்
அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருள் அப்துல் அஜிஸ் கூறினார்.
இந்த அமலாக்கத்தை நாம் தொடர்ந்தால் வெளிநாட்டு முதலீடுகள்
இதனால் பாதிக்கப்படாது. காரணம், முதலீட்டாளர்கள் நீண்ட கால
அடிப்படையில் முதலீடு செய்துள்ளனர் என்று அவர் சொன்னார்.
முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதற்கு முன்னர் கொள்கைகளும் தேசியக்
கொள்கைகளும் சீராக உள்ளதா என்பதில் கவனம் செலுத்துகின்றனர்
என்று அவர் தெரிவித்தார்.
உதாரணத்திற்கு செமிகண்டக்டர் எனப்படும் குறை கடத்தி துறை 1970ஆம்
ஆண்டுகளில் அதாவது 50 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டு
விட்டது. நாட்டின் கொள்கைகள் எத்தகையவை என்பதுதான்
முதலீட்டாளர்களின் கவனமாக உள்ளது. அக்கொள்கைகள் சீராக
இருந்தால் அவர்கள் முதலீடு செய்கின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
செலவுகளைப் பொறுத்த வரை பெரும்பாலான நிறுவனங்கள்
இலக்கிடப்பட்ட மானியத்தை பெறாத போதிலும் அவற்றின் செலவினம்
இன்னும் குறைவாகவே உள்ளது. பெரும்பாலான நிறுவனங்களுக்கான
மானியத்தை நாம் மீட்டுக் கொண்டாலும் முதலீட்டாளர்கள் மற்ற
நாடுகளுடன் மலேசியாவை ஒப்பிட்டுப் பார்ப்பார்கள். அப்போதும் கூட
மலேசிய பிற நாடுகளை விட செலவின ரீதியில் கவர்ச்சிகமான
இடமாகவே விளங்கும் என அவர் தெரிவித்தார்.
நேற்று இங்குள்ள பெல்கிரா சங்காட் லாடா, ஜமேக் அல் அன்சார்
பள்ளிவாசலில் ரமலான் இஹ்யா மற்றும் இஃப்தார் நிகழ்வில் கலந்து
கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் கூறினார்.
அரசாங்கம் உத்தேசித்துள்ள இலக்கிடப்பட்ட மானியத் திட்டம் வெளிநாட்டு
முதலீட்டாளர்களை நாடு ஈர்ப்பதில் பாதிப்பை ஏற்படுத்துமா என நிருபர்கள்
எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அமைச்சர் இவ்வாறு சொன்னார்.


