கோலாலம்பூர், ஏப் 1- ‘பாஸ் கட்சியினால் அங்கீகரிக்கப்பட்ட
நடைமுறைகளுக்கு எதிராக பகாங் சுல்தான் கடும் எச்சரிக்கை‘ எனும்
தலைப்பில் இணைய ஊடகம் ஒன்றில் வெளியான செய்தி குறித்து பகாங்
சுல்தான் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா
ஷா அலுவலகம் வெளியிட்ட அறிக்கையை தொலைத் தொடர்பு அமைச்சு
மிகவும் கடுமையாகக் கருதுகிறது.
இவ்விவகாரம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட்டு
சம்பந்தப்பட்ட ஊடகத்திற்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்
என்று அதன் அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.
மூன்று ஆர் விவகாரங்களை (ஆட்சியாளர்கள், இனம் மற்றும் சமயம்)
எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற நினைவூட்டலை மின், அச்சு
ஊடகங்கள், இணையத்தளங்கள், சமூக ஊடகங்களுக்கு வழங்கும்
வகையிலும் இந்நடவடிக்கை அமையும் என்று அவர் தெரிவித்தார்.
கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான அந்த செய்தி தொடர்பில்
மேன்மை தங்கிய பகாங் சுல்தான் மிகுந்த வருத்தத்தை
வெளிப்படுத்தியிருந்தார்.
இந்த செய்தி களங்கம் விளைவிக்கும் நோக்கத்தையும் சமூகத்திற்கிடையே
நல்லிணக்கமற்றச் சூழலுக்கு வழிகோலும் அளவுக்கு எதிர்மறையான
விளைவுகளையும் கொண்டுள்ளதாக மேன்மை தங்கிய சுல்தான்
கருதுகிறார் என்று தலைமைச் கட்டுப்பாட்டாளர் மேஜர் ஜெனரல் டத்தோ
முகமது ஜஹாரி யாஹ்யா கூறினார்.
உண்மையான பொருளிலிருந்து விலகும் அளவுக்குச் செய்திகள்
திரிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கு ஏதுவாக அனைத்து அச்சு மற்றும்
மின்னியல் ஊடகங்களும் ஒவ்வொரு செய்தியையும் வெளியிடுவதற்கு முன்னர் நன்கு ஆராய வேண்டும் என்று சுல்தான் அறிவுறுத்தியுள்ளார் என அவர் சொன்னார்.


