ஷா ஆலம், மார்ச் 30- கடந்த 2019 மற்றும் 2023 க்கும் இடையில் மலேசியாவில் அதிகமாக அதாவது மொத்தம் 23,170 கோடி வெள்ளி மதிப்புள்ள முதலீடுகளை சிலாங்கூர் ஈர்த்துள்ளதை முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சின் சமீபத்திய தரவுகள் காட்டுகின்றன.
அக்காலகட்டத்தில் தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட மொத்தம்
128,550 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீட்டில் 18 விழுக்காடு சிலாங்கூரில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் அமைச்சர் தெங்கு டத்தோஸ்ரீ ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜிஸ் கூறினார்.
சிலாங்கூருக்கு அடுத்து பினாங்கு (22,150 கோடி வெள்ளி அல்லது 17.2 சதவீதம்) மற்றும் ஜோகூர் (16,240 கோடி வெள்ளி அல்லது 12.6 சதவீதம்) ஆகிய மாநிலங்கள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
கடந்த 2019 முதல் 2023 வரை மலேசியாவில் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து முதலீடுகளிலும் கிட்டத்தட்ட பாதி (47.9 விழுக்காடு ) இந்த மூன்று மாநிலங்களை உள்ளடக்கியுள்ளன என்று அவர் சொன்னார்.
ஒட்டுமொத்தமாக பதிவான 24,231 திட்டங்களின் வாயிலாக (மொத்த முதலீட்டில் இருந்து) 611,705 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இக்காலக்கட்டத்தில் வெளிநாட்டு முதலீடு 70, 950 கோடி வெள்ளியாகவும் (55.2 விழுக்காடு ) உள்நாட்டு முதலீடு 5,760 கோடி வெள்ளியாகவும் (44.8 சதவீதம்) இருந்தது.
கடந்த 2013 முதல் 2023 வரை மாநிலம் மற்றும் மாவட்ட வாரியாக முதலீட்டு மதிப்புகள் மற்றும் வருமானம் குறித்து பாயா பெசார் தொகுதி உறுப்பினர் டத்தோ முகமது சஹார் அப்துல்லா எழுப்பிய கேள்விக்கு முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிலியல் அமைச்சர் தெங்கு ஸப்ருள் அப்துல் அஜிஸ் கடந்த மார்ச் 27ஆம் தேதி வழங்கிய பதிலில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களைப் பொறுத்தவரை, கோலாலம்பூர் 15, 980 கோடி வெள்ளி முதலீட்டையும் அதனைத் தொடர்ந்து கெடா 12,990 கோடி வெள்ளி முதலீட்டையும் சரவாக் 10,480 கோடி வெள்ளி முதலீட்டையும் பெற்றுள்ளன.








