கோலாலம்பூர், மார்ச் 27- நடப்பு வரி விதிப்பு கட்டமைப்பு முறை
மீறுசீரமைப்பு மற்றும் சாரா எனப்படும் சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா
திட்டம் உள்ளிட்ட விவகாரங்களுக்கு இன்றைய மக்களவைக் கூட்டத்தில்
முன்னுரிமை அளிக்கப்படும்.
நடப்பு பொருளாதாரச் சூழலைக் கருத்தில் கொண்டு தற்போதுள்ள வரி
விதிப்பு கட்டமைப்பை மறு ஆய்வு செய்வதற்கு நிதியமைச்சு எடுத்துள்ள
நடவடிக்கைகள் குறித்து பாரிட் தொகுதி பெரிக்கத்தான் நேஷனல்
உறுப்பினர் கேள்வியெழுப்புவார் என்று நாடாளுன்ற அகப்பக்கத்தில் இடம்
பெற்றுள்ள நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சாரா திட்டத்தின் பயனாளிகள் மற்றும் இத்திட்டத்தின் வாயிலாக
வழங்கப்பட்ட ஒதுக்கீடு குறித்து ஜெலி தொகுதி பெரிக்கத்தான் நேஷனல்
உறுப்பினர் ஜஹாரி கெச்சிக் நிதியமைச்சரிடம் வினவுவார்.
நாட்டிலுள்ள 141 நுழைவாயில்களை கண்காணிப்பதற்கு ஏதுவாக தேசிய
ஒற்றை எல்லை நிறுவனத்தை (எஸ்.பி.ஏ.) அமைக்கும் முன்னோடித்
திட்டத்தின் ஆகக் கடைசி மேம்பாடுகள் குறித்து உள்துறை அமைச்சரிடம்
ஜெம்புல் தொகுதி தேசிய முன்னணி உறுப்பினர் டத்தோ சம்சுல்கஹார்
முகமது டெலி கேள்வியெழுப்புவார்.
இன்றைய மக்களவைக் கூட்டத்தில் 2024 இணைய பாதுகாப்புச் சட்ட
மசோதா மற்றும் 2024ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்ட மசோதார
(திருத்தப்பட்டது) ஆகிய இரு மசோதாக்கள் இரண்டாம் வாசிப்புக்குத் தாக்கல்
செய்யப்படும்.
பதினைந்தாவது நாடாளுமன்றத்தின் மூன்றாம் தவணைக்கான முதலாவது
கூட்டத் தொடரின் கடைசி தினமாக இன்று விளங்குகிறது. கடந்த பிப்ரவரி
மாதம் 26ஆம் தேதி தொடங்கிய இக்கூட்டத் தொடர் 19 நாட்களுக்கு
நடைபெற்றது.


