சைபர்ஜெயா, மார்ச் 27 - முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவுக்கு எதிரான விசாரணையில் உதவுமாறு தாங்கள் பணிக்கப்பட்டதாக அவரின் இரு மகன்கள் கூறிய குற்றச்சாட்டுகள் குறித்து கருத்து தெரிவிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி.) தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி மறுத்துவிட்டார்.
எந்தவொரு கருத்தையும் கூறுவதற்கு முன் முதலில் உண்மைகளை ஆராய வேண்டும் என்று அவர் கூறினார்.
எந்தவொரு கருத்தையும் கூறுவதற்கு முன் தெளிவான விளக்கத்தைப் பெற விரும்புகிறேன். இந்த அறிக்கையைப் பற்றி எனக்குத் தெரியாது என்று அவர் நேற்று பிளாக்பெர்ரியின் சைபர் செக்யூரிட்டி சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் தொடக்கத்தின் போது ஊடகங்களுக்கு வழங்கிய சுருக்கமானப் பேட்டியில் தெரிவித்தார்.
அனைத்துலக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு சனிக்கிழமை (மார்ச் 23) அளித்த பேட்டியின் போது டான்ஸ்ரீ மொக்ஸானி மகாதீர் மற்றும் மிர்சான் மகாதீர் ஆகியோர் சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்து அஸாம் பாக்கியிடம் கருத்து கேட்கப்பட்டது.
எம்.ஏ.சி.சி.யின் விசாரணையில் தங்கள் தந்தை பிரதான சந்தேக நபராக இருக்கிறார் என நம்புவதற்கு காரணம் இருப்பதாக மகாதீரின் மகன்கள் கூறியுள்ளனர் என்று அச்செய்தி குறிப்பிட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் மிர்சான் மற்றும் மொக்ஸானியை எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைத்தது. இருப்பினும் விசாரணை என்ன என்பது தெளிவாகத் தெரியவில்லை.
கடந்த 1981 ஆம் ஆண்டு டாக்டர் மகாதீர் பிரதமராக ஆனதிலிருந்து மொக்ஸானி மற்றும் அவரது மூத்த சகோதரர் மிர்சான் ஆகியோர் சேர்த்த சொத்துக்களை அறிவிக்குமாறும் அந்த ஊழல் தடுப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவ்விருவரும் தங்கள் சொத்துக்களை அறிவிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.


