ECONOMY

திரங்கானுவுக்கான நியாயமான பங்கை ஒற்றுமை அரசு ஒருபோதும் நிராகரித்ததில்லை- பிரதமர்

21 மார்ச் 2024, 5:21 AM
திரங்கானுவுக்கான நியாயமான பங்கை ஒற்றுமை அரசு ஒருபோதும் நிராகரித்ததில்லை- பிரதமர்

புத்ராஜெயா, மார்ச் 21- மத்திய அரசின் மானியத்தை எந்த மாநிலத்திற்கும் வழங்குவதை ஒற்றுமை அரசாங்கம் ஒருபோதும் நிறுத்தியதில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். மாறாக, இவ்வாண்டிற்கான மானியம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2023 ஆம் ஆண்டு 155 கோடி வெள்ளியாக இருந்த திரங்கானு மாநிலத்திற்கான மேம்பாட்டு நிதி ஒதுக்கீடு இவ்வாண்டில் 159 கோடி வெள்ளியாக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ்  கூட்டரசு அரசாங்கத்தின் பட்ஜெட்டில் திரங்கானு மாநிலத்திற்கு வழங்கப்பட்ட மானியம் முந்தைய அரசாங்கம் வழங்கியதை விட அதிகமாகும் என்று இன்று இங்கு நடைபெற்ற நிதியமைச்சின் மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வில் அவர் தெரிவித்தார்.

எனது தலைமையிலான மத்திய அரசாங்கம் திரங்கானு மாநிலத்திற்கு எதிராக குரோத மனப்பான்மையுடன் நடந்து கொண்டதில்லை. கடந்த 2023ஆம் ஆண்டு பெட்ரோலிய வருமானத்தின் அடிப்படையில் ‘வாங் ஏஹ்சான்‘ (கருணைத் தொகை) நிதியாக 78 கோடியே 60 லட்சம் வெள்ளியை திரங்கானுவுக்கு மத்திய அரசு வழங்கியது என நிதியமைச்சருமான அவர் சொன்னார்.

மேம்பாட்டு நிதி கருணைத் தொகையை விட அதிகமாகும். ஆனால், அந்த நிதி நேரடியாக மக்கள் நலத் திட்டங்களுக்கு செலவிடப்பட்டது என்றார் அவர்.

அவசர சூழல்களில் குறிப்பாக தாசேக் கென்யீர் மண்சரிவு போன்ற பாதிப்புகளைச் சரி செய்யும் திட்டங்களை விரைவுபடுத்த நாம் தொடர்ந்து நிதியுதவி வழங்கி வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.

பாஸ் அல்லது பெர்சத்து வசமுள்ள தொகுதிகள் என்ற பேதமின்றி அனைத்து தொகுதிகளுக்கும் மானியம் கிடைப்பதை உறுதி செய்யும்படி ஐ.சி.யு. எனப்படும் அமலாக்க ஒருங்கிணைப்பு பிரிவு தாம் பணித்துள்ளதாக அவர் சொன்னார்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.