ஷா ஆலம், மார்ச் 20 - கடன் தொகையை திரும்பப் பெறும் பணிகளை மேம்படுத்துவதற்காக யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் மற்றும் கடன் ஆலோசக மற்றும் மேலாண்மை நிறுவனம் (ஏ.கே.பி.கே.) ஆகியவை ஒத்துழைப்பை நல்கவுள்ளன.
பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர் தங்கள் கடன் தொகையைத் திரும்பச் செலுத்துவதற்கு ஏதுவாக அவர்களின் நிலை மேலாண்மையை ஒருங்கிணைப்பதில் ஏ.கே.பி.கே. உதவும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
முதல் கட்டமாக சுமார் 1 கோடியே 20 லட்சம் வெள்ளியை உள்ளடக்கிய 1,000 கடனாளிகளின் பெயர்ப் பட்டியல் மேல் நடவடிக்கைக்காக அந்த நிறுவனத்திடம் வழங்கப்பட்டுள்ளது என்று அவர் சொன்னார்.
சராசரி 25 விழுக்காட்டினர் கடுமையான கடன் பாக்கிப் பிரச்சனையை எதிர் கொண்டுள்ளனர். கடனாளிகளுக்கு சுமை ஏற்படாத வகையில் நிதி மேலாண்மை உள்பட பல்வேறு வழிகளில் இப்பிரச்சனைக்குத் தீர்வு காணவிருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக அவர் இவ்விரு அமைப்புகளுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வை பார்வையிட்டார். ஹிஜ்ரா சிலாங்கூர் தலைமைச் செயல்முறை அதிகாரி டத்தோ மேரியா ஹம்சா மற்றும் ஏ.கே.பி.கே. தலைமைச் செயல்முறை அதிகாரி அஸாடின் ங்கா தாசிர் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதனிடையே, ஹஜிராவில் கடன் பெற்ற தொழில் முனைவோருக்கு நிதிக் கல்வி மற்றும் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குவதிலும் ஏ.கே.பி.கே. ஒத்துழைப்பு வழங்கும் என்று டத்தோ மேரியா கூறினார்.
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள தொழில் முனைவோருக்கு நேர்மறையான தாக்கத்தை உருவாக்குவதற்கான உதவிகளை வழங்குவதில் இரு தரப்பும் கொண்டுள்ள கடப்பாட்டை இந்த ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.




