கோலாலம்பூர், மார்ச் 19 - ரிங்கிட் மதிப்பை நிலையாக நிர்ணயம் செய்யும் திட்டம் அரசாங்கத்திடம் இல்லை என்று நிதியமைச்சர் II டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அஜிசான் தெரிவித்தார்.
கடந்த 1998ஆம் ஆண்டில் ரிங்கிட் நிர்ணயம் செய்ப்பட்ட காலகட்டத்துடன் ஒப்பிடும்போது அப்போதைய பொருளாதார நிலை முற்றிலும் வேறுபட்டிருந்தது என்று அவர் தெரிவித்தார்.
அப்போது பங்குச் சந்தை 76 சதவீதம் சரிவு கண்டிருந்தது. வெளிநாட்டுக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) 16 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது என்று அமீர் ஹம்சா விளக்கினார்.
ஆனால், தற்போதைய நிலை வேறுபட்டது. இந்த ஆண்டின் தொடக்கத்திலிருந்து பங்குச் சந்தை 6.0 சதவீதம் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் வெளிநாட்டுக் கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.0 முதல் 2.0 சதவீதம் வரை மட்டுமே உள்ளது என அவர் சொன்னார்.
எனவே, தேசிய கையிருப்பின் அடிப்படையில் பார்த்தால், பேங்க் நெகாரா மலேசியாவின் கையிருப்பு 1,300 கோடி வெள்ளிக்கும் சற்று அதிகமாக அல்லது குறைவாக உள்ளது. இது 1998ஆம் ஆண்டில் பதிவான 2,600 கோடி வெள்ளியை விட இது மிகவும் சிறப்பாக உள்ளது. எனவே, நாம் அவசரப்பட்டு செயல்பட வேண்டிய அவசியம் இல்லை என்று இன்று மேலவையில் கேள்வி நேரத்தின் போது அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டு ரிங்கிட் மதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகராக 4.50 என்ற அளவுக்கு நிலைபெறும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளதாக அமீர் ஹம்சா குறிப்பிட்டார். மடாணி பொருளாதார கட்டமைப்பின் கீழ் ரிங்கிட் எதிர்காலத்தில் சிறப்பாகச் செயல்படும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் கூறினார்.




