கோல கங்சார், மார்ச் 19- நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பை விட அதிக கூடுதல் விலையில் கோழியை விற்பனை செய்த மொத்த வியாபாரி ஒருவருக்கு இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் 10,000 வெள்ளி அபராதம் விதித்தது.
தமக்கு எதிராக கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டை ஷாருடின் சைடோன் (வயது 54) என்ற அந்த வியாபாரி ஒப்புக் கெண்டதைத் தொடர்ந்து நீதிபதி ரோஹாய்டா இஷாக் இத்தண்டனையை விதித்தார். அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் நான்கு மாதச் சிறைத்தண்டனை அனுபவிக்கவும் அவர் உத்தரவிட்டார்.
கட்டுப்படுத்தப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருளான கோழியை மொத்த வியாபாரிகள் கிலோ வெ.8.10 என்ற மொத்த விலையில் விற்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கிலோ வெ.8.90 என்ற விலையில் விற்பனை செய்ததாக ஷாருடின் மீது குற்றஞ் சாட்டப் பட்டிருந்தது.
கடந்தாண்டு அக்டோபர் மாதம் 14ஆம் தேதி அதிகாலை 6.30 மணிக்கும் காலை 7.00 மணிக்கு இடையே பாடாங் ரெங்காஸ், எண் 27 டி, ஜாலான் பெசாரில் உள்ள எவாண்டா மாஜூ பெர்காட் எண்டர்பிரைஸ் எனும் நிறுவன வளாகத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர் குற்றச்சாட்டை எதிர் நோக்கியிருந்தார்.
அவருக்கு எதிராக 2011ஆம் ஆண்டு விலை கட்டுப்பாடு மற்றும் பங்கீட்டு எதிர்ப்புச் சட்டத்தின் 11 பிரிவு மற்றும் அதே சட்டத்தின் 18(பி) பிரிவின் கீழ் எதிராக குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டிருந்தது.
இச்சட்டப் பிரிவின் கீழ் குற்றவாளி என நிரூபிக்கப் பட்டால் 100,000 வெள்ளி வரை அபராதம், மூன்று ஆண்டுகளுக்கும் மேற்போகாத சிறை தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.




