கோலாலம்பூர், மார்ச் 19 - மலேசிய லீக் மற்றும் ஆசிய வெற்றியாளர் லீக் 2
போட்டிகளை எதிர்கொள்ளும் வகையில் குழுவை வலுப்படுத்துவதற்கு
ஏதுவாக புதிய உதவிப் பயிற்றுநரை சிலாங்கூர் எஃப்.சி. நியமிக்கவுள்ளது.
காலியாக உள்ள இந்த பதவிக்கு சில நபர்களின் பெயர்களை தாங்கள்
பரிசீலித்து வருவதாக அக்குழுவின் நிர்வாகி முஃபிசுல் ருஷிடின் அப்துல்
ரஷிட் கூறினார்.
கடந்த பருவத்தின் போது இருந்ததைப் போல் உள்நாட்டவர் தலைமைப்
பயற்றுநராகவும் உதவிப் பயிற்றுநர்கள் வெளிநாடுகளைச்
சேர்ந்தவர்களாகவும் இருப்பதற்கான சாத்தியத்தை மறுப்பதற்கில்லை
என்று அவர் சொன்னார்.
பயிற்றுநர் அணியை அதிகரிப்பதற்கான திட்டம் ஏற்கனவே உள்ளது. அதன்
அடிப்படையில் நிட்ஸாம் ஜாமில் தலைமைப் பயிற்றுநராக
நியமிக்கப்பட்டுள்ளார். ஆகவே ஆர்வமுள்ள பயிற்றுநர்களை வரவேற்க
நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போது நாங்கள் பரிசீலித்து வரும் பெயர்களில் உள்நாட்டினரும்
இறக்குமதி பயிற்றுநர்களும் உள்ளனர். இதன் தொடர்பில் விரைவில்
அறிவிப்பை வெளியிடுவோம் என்றார் அவர்.
சிலாங்கூர் எஃப்.சி.குழுவின் தற்காலிக நடத்துநராகவும் உள்ள நிட்ஸாம்
2024/25 பருவத்திற்கான தலைமைப் பயிற்றுநர் குழுவை கடந்த
சனிக்கிழமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
சிலாங்கூர் எஃப்.சி. குழுவின் தலைமைப் பயிற்றுநராக டான் செங்
ஹோவும் உதவிப் பயிற்றுநர்களாக நிட்ஸாம் மற்றும் ரோமன் மார்க்கோட்
ஆகியோர் இருந்தனர். எனினும் செங் ஹோ தாய்லாந்தின் முதல் நிலை
கிளப்பான போலீஸ் தேரோ எப்.சி.ஐ. குழுவுக்கு பயிற்றுநராகப்
பொறுப்பேற்றுள்ளார்.




