புத்ராஜெயா, மார்ச் 18- எந்த நாட்டின் புவிசார் அரசியலில் தலையிடாமல்
மலேசியாவுக்குப் பயன்தரும் முதலீடுகளை அரசாங்கம் தொடர்ந்து
ஊக்குவித்து வருவதாகப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
உலகின் இரு வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா
இடையிலான உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளதை உணர்ந்துள்ள
போதிலும் எந்தத் தரப்புக்கும் ஆதரவு தருவதற்கு அது ஆர்வம்
காட்டவில்லை என்று அவர் சொன்னார்.
ஒரு சில விஷயங்கள் மட்டுமே, குறிப்பாக பாலஸ்தீனம் மற்றும் சீனா
விவகாரங்கள் மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டன. ஏனென்றால் நாம்
ஏன் சீனா பக்கம் சார்ந்திருக்கிறோம் என்பதில் மேற்கத்திய நாடுகள்
சந்தேகம் கொண்டுள்ளன. எனது பதில் மிகவும் சுருக்கமானது. நாங்கள்
சிறிய நாடு. நாங்கள் முன்னேற விரும்புகிறோம். எங்கள் மக்கள் நலனுக்கு
முன்னுரிமை அளிக்கிறோம் என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்காவிடமிருந்து கிடைக்கும் ஒட்டுமொத்த முதலீடு தொடர்ந்து
முதலிடம் வகிக்கும் வேளையில் அமெரிக்கா முதலீட்டாளர்களுடன்
நமக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. அவர்களை நாங்கள் கனிவுடன்
வரவேற்கத் தயாராக இருக்கிறோம் என்று அவர் இன்று இங்கு நடைபெற்ற
பிரதமர் துறையின் மாதாந்திர ஒன்று கூடும் நிகழ்வில் உரையாற்றிய
போது குறிப்பிட்டார்.
சீனாவுடனான விவகாரங்களை நாங்கள் மேலும் பெரிதாக்க
விரும்பவில்லை. கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அவை சுமூகமான
விவாதங்கள் மூலம் தீர்க்கப்படும் என்றார் அவர்.
என்னிடம் சைனபோபியா அல்லது சீனாபோபியா பற்றி கேட்கப்பட்டால்
முரண்படுவதில் அல்லது யாருக்கும் எதிர்ப்பாக நிற்பதற்கு எந்த காரணமும் இல்லை என்பதுதான் எனது பதிலாகும் என்று அவர் தெரிவித்தார்.




