ஷா ஆலம், மார்ச் 18- கிள்ளான்-பந்திங்-சிப்பாங் கூட்டரசு சாலையை
சீரமைக்க மத்திய அரசு 1 கோடியே 17 லட்சத்து 90 ஆயிரம் வெள்ளியை
ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய இந்த
சீரமைப்புப் பணி இவ்வாண்டு அக்டோபர் மாதம் முற்றுப் பெறும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த வழித்தடத்தில் தொடர்ச்சியான பராமரிப்பு பணிகளை
மேற்கொள்வதற்காக இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகப்
பொதுப்பணித் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி
கூறினார்.
இப்பணிகளில் நடைபாதைகள், பாலங்கள், சாலை விளக்குகள் மற்றும்
சமிக்ஞை விளக்குகளை பராமரிப்பதும் அடங்கும் என்று அவர் மேலும்
குறிப்பிட்டார்.
ஆறு சாலையோர நடைபாதைத் திட்டங்கள் இரு நடைபாதை இல்லாத
சாலையோரத் திட்டங்கள், 11 சாலை விளக்குகள் மற்றும் மற்றும்
சமிக்ஞை விளக்குகளை பருவகால அடிப்படையில் பராமரிப்பதை
இத்திட்டம் உள்ளடக்கியுள்ளது. இத்திட்டங்கள் யாவும் எதிர்வரும் அக்டோபர்
மாதம் முற்றுப் பெறும் என்று அவர் நாடாளுமன்றத்தில் வழங்கிய
எழுத்துப்பூர்வப் பதிலில் தெரிவித்தார்.
இந்த சீரமைப்புத் திட்டம் கிள்ளான் முதல் சிப்பாங் வரையிலான 55.7
கிலோ மீட்டர் பகுதி, பந்திங் முதல் செமினி வரையிலான 15 கிலோ
மீட்டர் பகுதி, ஜாலான் லபோஹான் டாகாங் முதல் நீலாய் வரையிலான
10 கிலோ மீட்டர் பகுதியை உள்ளடக்கியுள்ளது என்று அவர் சொன்னார்.
இந்த கூட்டரசு சாலைகளை சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனங்கள்
பராமரிக்கும் என்று கோல லங்காட் தொகுதி உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர்
அகமது யூனுஸ் ஹைரியின் கேள்விக்குப் பதிலளிக்கையில குறிப்பிட்டார்.
இதனிடையே, கடந்த 2021 முதல் 2023 வரை சாலை பராமரிப்பு
பணிகளுக்காக அரசாங்கம் 1 கோடியே 77 லட்சத்து 70 ஆயிரம்
வெள்ளியைச் செலவிட்டதாக கூறிய அவர், பாலம், சாலை விளக்குகள்,
சமிக்ஞை விளக்குகளை உட்படுத்திய இப்பணிகள் முழுமையாக
மேற்கொள்ளப்பட்டு விட்டன என்றார்.




