ஷா ஆலம், மார்ச் 18 - மேற்கு கடற்கரை நெடுஞ்சாலைத்
(டபள்யூ.சி.இ.) திட்டத்தில் சிலாங்கூர் மாநிலத்திலுள்ள இரு பிரிவுகளான
செக்சன் 1 (பந்திங் சாலை சந்திப்பு முதல் எஸ்.கே.வி.இ. வரை) மற்றும்
செக்சன் 2 (எஸ்.கே.வி.இ. முதல் எஸ்.ஏ.இ. வரை) இவ்வாண்டு இரண்டாம்
காலாண்டில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இவ்வாண்டு ஜனவரி 25ஆம் தேதி வரை இந்த நெடுஞ்சாலைத் திட்டத்தின்
கட்டுமானப் பணிகளில் 91.69 விழுக்காடு பூர்த்தியடைந்துள்ளதாகப்
பொதுப்பணித் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி
கூறினார்.
இதில் செக்சன் 1 மற்றும் செக்சன் 2 ஆகிய பகுதிகள் 2024 இரண்டாம்
காலாண்டில் போக்குவரத்துக்குத் திறக்கப்படவுள்ளன என்று அவர்
சொன்னார்.
இதனிடையே, செக்சன் 3 (எஸ்ஏஇ சாலை சந்திப்பு முதல் என்.கே.வி.இ
வரை) மற்றும் செக்சன் 7 (அசாம் ஜாவா சாலை சந்திப்பு முதல்
தஞ்சோங் காராங் சந்திப்பு வரை) ஆகியவற்றில் கட்டுமானப் பணிகள்
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் எதிர்வரும் 2025ஆம் ஆண்டு
அப்பணிகள் முழுமை பெறும். இதனுடன் இந்த நெடுஞ்சாலைத் திட்டம்
முழுமையாக பூர்த்தியடையும் என்றார் அவர்.
டபள்யூ.சி.இ. நெடுஞ்சாலைத் திட்டத்தின் ஆகக் கடைசி நிலவரங்கள்
தொடர்பில் கோல லங்காட் தொகுதி உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர்
யூனுஸ் ஹைரி மக்களவையில இன்று எழுப்பிய கேள்விக்குப்
பதிலளிக்கையில் அமைச்சர் இவ்வாறு கூறினார்.
மாநிலத்தின் மேலும் இரு பகுதிகளான செக்சன் 5 (என்.என்.கே.எஸ்.பி.-
காப்பார் சாலை சந்திப்பு) கடந்த 2019ஆம் ஆண்டு திறக்கப்பட்ட வேளையில் செக்சன் 6 (காப்பார் சாலை சந்திப்பு- அசாம் ஜாவா சாலை சந்திப்பு) கடந்தாண்டு திறக்கப்பட்டது என்று அவர் சொன்னார்.
மொத்தம் 316 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த நெடுஞ்சாலையின் 233
கிலோ மீட்டர் பகுதி தனியார் நிறுவனத்தின் வாயிலாக
மேற்கொள்ளப்பட்ட வேளையில் எஞ்சிய 83 கிலோ மீட்டர் பகுதி
பொதுப்பணி இலாகாவின் மேற்பார்வையில் நிர்மாணிக்கப்பட்டது.




