பாகன் டத்தோ, மார்ச் 18: நாடு முழுவதும் மீன்களின் விலை இன்னும் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், ரம்ஜான் மற்றும் ஐடில்பித்ரி முழுவதும் போதுமான அளவு மீன்கள் இருப்பதாக மலேசிய மீன் மேம்பாட்டு வாரியம் (LKIM) உறுதியளித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காலம் முடிந்த பிறகு தற்போது பல்வேறு வகையான மீன்கள் கிடைக்கப்பெற்று வருகின்றன என LKIM தலைவர் முகமட் ஃபைஸ் ஃபாட்சில் கூறினார்.
"Q'Fish முறையின் மூலம் உறைந்த மீன்களை வைப்பதற்கான இடத்தை மலேசிய மீன் மேம்பாட்டு வாரியம் வழங்குகிறது. இது மிகவும் நியாயமான விலையில் விற்கப்படுகிறது. LKIM தனியார் நிறுவனங்களுடன் இணைந்து 1,590 மெட்ரிக் டன் புதிய உறைந்த மீன்களை அடுத்த மாதம் ஐடில்பித்ரி பண்டிகைக்காக வழங்கவுள்ளது,`` என அவர் தெரிவித்தார்.
இன்று சுங்கை சுமன் பகுதி மீனவர்கள் சங்கத்திற்கு (ஹிலர் பேராக்) பள்ளிக்குத் திரும்பும் மடாணி திட்டம் மூலம் உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இவ்வாறு கூறினார்.
மொத்தம் 100 மீனவர்களின் குழந்தைகள் தலா RM150 மதிப்பில் ஆடைகள், பள்ளி காலணிகள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் எழுதுபொருட்கள் போன்ற பள்ளி உபகரணங்களைப் பெற்றனர்.
இதற்கிடையில், நுகர்வோருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் மீன்களின் விலையை தங்கள் விருப்பப்படி உயர்த்தி சாதகமாகப் பயன்படுத்த வேண்டாம் என்று அவர் வணிகர்களுக்கு நினைவூட்டினார்.
மேலும், உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு அமைச்சகம் கண்காணிப்பை மேற்கொள்ளும் என்றும், இதனால் மீன் விலைகள் கட்டுப்படுத்தப்பட்டு நிலையானதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
மீன்களின் கையிருப்பு அதிகம் இருப்பதால் அவற்றின் விலை மலிவாக உள்ளது.எனவே, தன்னிச்சையாக மீன் விலையை உயர்த்த வேண்டாம் என வியாபாரிகளிடம் வலியுறுத்துகிறேன்,'' என்றார்.
– பெர்னாமா




