ஷா ஆலம், மார்ச் 18: அடுத்த ஆண்டு பள்ளி அமர்வு பிப்ரவரியில் தொடங்கும். இது 2026 ஆம் ஆண்டு ஜனவரிக்குக் கற்றல் அமர்வைக் கொண்டு வருவதற்கான அரசாங்கத்தின் நடவடிக்கைகளில் ஒன்றாகும்.
இதை செயல்படுத்துவதை உறுதி செய்வதற்காக இந்த ஆண்டு முழுவதும் கல்வி நாட்காட்டியை தனது தரப்பு தீவிரமாகச் சீரமைத்து வருகிறது என்று துணைக் கல்வி அமைச்சர் வோங் கா வோ விளக்கினார்.
"2025 மற்றும் 2026 ஆம் ஆண்டுக்கான கல்வி நாட்காட்டியைத் தயாரிப்பது, தேசிய ஆசிரியர் சேவை சங்கம், சரவாக் ஆசிரியர் சங்கம் மற்றும் சபா அரசு ஆசிரியர் சங்கம் போன்ற ஆசிரியர் சங்கங்கள் பங்குதாரர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது" என்று அவர் இன்று மக்களவையில் கூறினார்.
முழுப் பள்ளிப் பாடத்திட்டத்தையும் முடிக்க 32 முதல் 36 வாரங்களுக்கு இடைப்பட்ட கற்பித்தல் மற்றும் கற்றல் காலத்தை கல்விக் காலண்டர் சிறந்த முறையில் பூர்த்தி செய்வதாக உறுதி செய்யப்படுகிறது.
"பள்ளி கல்வி நாட்காட்டியின் மாற்றத்திற்கு ஏற்ப பொதுத் தேர்வு அட்டவணையில் சீரமைப்பு செயல்படுத்தப்படும்" என்று கா வோ கூறினார்.
முன்னதாக, கோவிட்-19 பரவல் காரணமாகத் தற்போது மார்ச் மாதத்தில் தொடங்கிய புதிய பள்ளி அமர்வு, 2026 ஆம் ஆண்டு ஜனவரிக்குத் திரும்பும் என்று கல்வி அமைச்சர் ஃபத்லினா சிடெக் கூறினார்.




