கோலாலம்பூர், மார்ச் 18 - பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கும்
மைக்ரோசோப்ட் நிர்வாகத் தலைவரும் தலைமைச் செயல்முறை
அதிகாரியுமான சத்யா நடேல்லாவுக்கும் இடையிலான சந்திப்பு மற்றொரு
தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த பிராந்தியத்தின் சில நாடுகளுக்கு அவர் மேற்கொள்ள ஏற்கனவே
திட்டமிடப்பட்ட பயணம் தவிர்க்க இயலாத சில சூழ்நிலைகளால் ஒத்தி
வைக்கப்பட்டதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது என்று முதலீடு,
வர்த்தகம் மற்றும் தொழிலியல் அமைச்சின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
சத்யாவின் மலேசிய வருகைக்கான புதிய தேதி கிடைத்தவுடன் அது
குறித்து அறிவிக்கப்படும் என்று அவர் சொன்னார்.
‘மைக்ரோசோப்ட் பில்ட்-ஏஐ டே இவெண்ட்‘ எனும் நிகழ்வில்
பங்கேற்பதற்காக சத்யா பேங்காக், கோலாலம்பூர், ஜாகர்த்தா ஆகிய
நகரங்களுக்கு இம்மாதம் 19 முதல் 21 வரை பயணம்
மேற்கொள்ளவிருப்பதாக முன்னதாகக் கூறப்பட்டது.
இந்த பயணத்தின் ஒரு பகுதியாக அவர் மார்ச் 20ஆம் தேதி கோலாலம்பூர்
வருவதற்குத் திட்டமிடப்பட்டிருந்தது.




