கோலாலம்பூர், மார்ச் 18 - செமினி, புக்கிட் புரோகாவில் இரண்டு ஏக்கர் (0.8
ஹெக்டர்) வனப்பகுதியில் நேற்றிரவு தீவிபத்து ஏற்பட்டத் தீ இன்று
அதிகாலை முழுமையாக அணைக்கப்பட்டது.
மொத்தம் 28 பேர் கொண்ட தீயணைப்புக் குழுவினர் இன்று அதிகாலை 3.30
மணியளவில் தீயை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்ததாக
சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப்
பிரிவு உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் மொக்தார் கூறினார்.
தீ ஏற்பட்ட பகுதிக்குச் செல்வதற்கு முறையான சாலை வசதி இல்லாத
காரணத்தால் அந்த குன்றின் உச்சியை அடைவதற்குத் தீயணைப்பு
வீரர்களுக்கு 30 முதல் 45 நிமிடங்கள் வரை பிடித்ததாக அவர் சொன்னார்.
அந்த குன்றின் மீது காற்று பலமாக வீசியதால் தீ வெகு வேகமாகப்
பரவியது. அங்கு நீர் ஆதாரம் ஏதும் இல்லாததால் தீயணைப்பாளர்கள்
தீயை அடித்து அணைக்கும் அணுகுமுறையைப் பயன்படுத்தினர் என்றார்
அவர்.
இந்த தீச்சம்பவம் தொடர்பில் நேற்றிரவு 7.39 மணியளவில் தகவல்
கிடைத்ததைத் தொடர்ந்து செமினி தீயணைப்பு நிலையத்திலிருந்து அறுவர்
கொண்ட தீயணைப்புக் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர்
தெரிவித்தார்.
இந்த தீச்சம்பவத்திற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனக்
கூறிய அவர், இதில் யாருக்கும் உயிருடச்சேதம் ஏற்படவில்லை என்றார்.




