கோலாலம்பூர், மார்ச் 18 - இங்குள்ள ஜாலான் புக்கிட் பிந்தாங் மற்றும்
ஜாலான் புடு வட்டாரத்தில் விபசார மையங்கள் என சந்தேகிக்கப்படும் 11
இடங்களில் போலீசார் மேற்கொண்ட சோதனையில் 39 அந்நிய நாட்டினர்
உள்பட 47 பேர் கைது செய்யப்பட்டனர்.
நேற்று மாலை 2.50 மணி தொடங்கி இரவு 11.00 மணி வரை
மேற்கொள்ளப்பட்ட இந்த ஓப் நோடா சோதனை நடவடிக்கையில்
சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்பட்டதாக டாங் வாங்கி
மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி நோர் டெல்ஹான் யாஹ்யா கூறினார்.
இந்த சோதனையில் 18 முதல் 60 வயது வரையிலான உள்நாட்டைச்
சேர்ந்த ஆறு ஆண்கள் மற்றும் இரு பெண்களும் அந்நிய நாடுகளைச்
சேர்ந்த 14 ஆண்களும் 25 பெண்களும் கைது செய்யப்பட்டதாக அவர்
தெரிவித்தார்.
ஏழு உடம்புபிடி நிலையங்கள், இரண்டு விபசார விடுதிகள் மற்றும் ஒரு
உணவு விற்பனை மையம் ஆகியவற்றை இந்த சோதனை நடவடிக்கை
உள்ளடக்கியிருந்தது என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில்
குறிப்பிட்டார்.
இந்த சோதனையின் போது 20 பூங்கொத்துகள், மசாஜ் எண்ணெய்,
உடம்புபிடி தொடர்பான விளம்பரப் பதாகைகள், கைபேசிகள் உள்பட 4,730
வெள்ளி மதிப்புள்ள பொருள்கள் கைப்பற்றப்பட்டன என்று அவர் மேலும்
சொன்னார்.
இந்த நடவடிக்கையில் கைதானவர்களுக்கு எதிராக தண்டனைச் சட்டத்தின்
372பி மற்றும் 55பி, 1959/63 குடிநுழைவுச் சட்டத்தின் 6(1)(சி) பிரிவுகளின் கீழ்
விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அவர் கூறினார்.




