கோலாலம்பூர், மார்ச் 18 - செமினி, புக்கிட் புரோகாவில் இரண்டு ஏக்கர் (0.8 ஹெக்டர்) வனப்பகுதியில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த தீ விபத்து தொடர்பில் நேற்றிரவு 7.39 மணியளவில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவு உதவி இயக்குனர் அகமது முக்லிஸ் மொக்தார் கூறினார்.
இதனைத் தொடர்ந்து செமினி தீயணைப்பு நிலையத்திலிருந்து அறுவர் கொண்ட தீயணைப்புக் குழுவினர் தீயணைப்பு வாகனம் ஒன்றில் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் சொன்னார்.
புக்கிட் புரோகா குன்றின் உச்சியில் உள்ள காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ இதர பகுதிகளுக்கும் பரவாமல் தடுப்பதற்கான நடவடிக்கையில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்றார் அவர்.
இந்த சம்பவத்திற்கு காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை எனக் கூறிய அவர், இவ்விபத்தில் யாருக்கும் உயிருடச்சேதம் ஏற்படவில்லை என்று தெரிவித்தார்.




