கோல சிலாங்கூர், மார்ச் 11- கடந்தாண்டு சிலாங்கூர் மாநிலம் ஈர்த்துள்ள
5,530 கோடி வெள்ளி மதிப்பிலான முதலீடுகளின் வாயிலாகப் பல்வேறு
துறைகளில் 30,000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
கோவிட்-19 பெருந்தொற்று மற்றும் கடுமையான வெள்ளம் போன்ற
பேரிடர்களை எதிர்கொண்ட போதிலும் சந்தையின் தேவையை நிறைவு
செய்யும் வகையில் தேவையான வேலை வாய்ப்புகளை மாநில அரசினால்
உருவாக்க முடிந்ததாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி
கூறினார்.
நடப்பு தேவைகளை ஈடு செய்வதற்காகத் தொழில்நுட்ப மற்றும்
தொழில்திறன் திட்டங்கள் அல்லது கல்விக்கூடங்களை (திவேட்)
அமைக்கும் முயற்சியில் மாநில அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது
என்று அவர் தெரிவித்தார்.
உதாரணத்திற்கு எஸ்.டி.டி.சி.யைக் (சிலாங்கூர் மாநில தொழில்திறன்
மேம்பாட்டு மையம்) கூறலாம். வளர்ச்சியடைந்த மாநிலமாக ஆவதற்கான
முன்னேற்பாடாகவும் வட்டார மனித ஆற்றல் தேவையை
ஈடுசெய்வதற்காகவும் திவேட் திட்டத்திற்கு நாங்கள் முன்னுரிமை அளித்து
வருகிறோம் என்று அவர் சொன்னார்.
நாட்டின் மற்றும் மாநிலத்தின் தேவையை ஈடு செய்வதற்காக திறன்
மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு வியூகங்கங்களுடன் இத்தகைய
கல்விக்கூடங்களை உருவாக்குவது அவசியம் என அவர் சொன்னார்.
நேற்று இங்கு நடைபெற்ற 2024ஆம் ஆண்டிற்கான மந்திரி புசார் கிண்ண
சொற்போர் போட்டியை முடித்து வைத்து உரையாற்றுகையில் அவர்
இவ்வாறு தெரிவித்தார்.
இன்பென்ஸ் அனைத்துலகக் கல்லூரி என அழைக்கப்பட்ட இந்த
தொழில்கல்விக் கூடம் கடந்த 2020ஆம் ஆண்டு எஸ்.டி.டி.சி. என
உருமாற்றம் செய்யப்பட்டது.




