கூச்சிங், மார்ச் 8 - சரவாக் மாநிலத்தில் கடந்த ஜனவரி முதல் மார்ச் 6 வரை 2,312 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 76 லட்சத்து 20 ஆயிரம் வெள்ளி மதிப்புள்ள பல்வேறு வகையான போதைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனர்.
அதே காலகட்டத்தில் போதைப்பொருள் கடத்தல் மூலம் பெறப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 557,294 வெள்ளி மதிப்புள்ள சொத்துக்களையும் தாங்கள் கைப்பற்றியதாக சரவாக் காவல்துறை ஆணையர் டத்தோ மஞ்சா ஆதா தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் துஷ்பிரயோகத்தை ஒடுக்குவதற்கு போலீசார் தொடர்ந்து போராடி வருகின்றனர். தங்களைச் சுற்றி நடக்கும் போதைப்பொருள் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை சமூகம் தொடர்ந்து எங்களுக்கு வழங்கும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
இதற்கிடையில், மார்ச் 4 முதல் 6 வரை போலீசார் மாநிலம் முழுவதும் உள்ள தோட்டங்கள், மீன்பிடி படகுத்துறைகள், கிராமங்கள், கடைவீடுகள் உள்ளிட்டப் பகுதிகளில் 342 'ஒப் தாப்பிஸ்' சோதனைகளை நடத்தியதாக மஞ்சா கூறினார்.
இந்த நடவடிக்கையின் போது போதைப்பொருள் தொடர்பான பல்வேறு குற்றங்களுக்காக 17 முதல் 56 வயதுக்குட்பட்ட 282 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், 42,911 வெள்ளி மதிப்பிலான 656.63 கிராம் போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன அவர் சொன்னார்.




