கோலாலம்பூர், மார்ச் 8 – அமெரிக்காவின் கிளீவ்லேண்டில் உள்ள கிளீவ்லேண்ட் ராக்கட் கிளப்பில் நடைபெறும் லேண்ட் ஸ்குவாஷ் போட்டியில் தேசிய வீராங்கனையான எஸ்.சிவசங்கரி அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தார்.
நேற்று வியாழக்கிழமை (மலேசிய நேரப்படி இன்று அதிகாலை) நடைபெற்ற ஆட்டத்தில் உலகின் 16ஆம் நிலை மகளிர் ஒற்றையர் வீராங்கனையான சிவசங்கரி, காலிறுதிச் சுற்றில் இங்கிலாந்தின் அலிசியா மீட்டை 23 நிமிடங்களில் 11-6, 11-8, 11-8 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
25 வயதான அவர் அரையிறுதியில் மற்றொரு இங்கிலாந்து ஆட்டக்காரரும் உலகின் ஆறாவது நிலை வீராங்கனையுமான ஜார்ஜினா கென்னடியை எதிர்கொள்கிறார்.
சிறப்பாக விளையாடியதற்காகவும் மூன்றாவது வெற்றியைப் பெற்றதற்காகவும் பெருமிதம் கொள்கிறேன் . அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று அவர் நிபுணத்துவ ஸ்குவாஷ் சங்கத்தின் (பி.எஸ்.ஏ.) உலக சுற்றுப்பயண வலைத்தளத்திடம் கூறினார்.
கென்னடிக்கு எதிராக இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் ஒன்றில் மட்டுமே சிவசங்கரி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, ஆடவர் ஒற்றையர் பிரிவில், முதல் நிலை வீரரான இங் எய்ன் இயோ 7-11, 7-11, 13-11, 12-10, 11-6 என்ற செட் கணக்கில் மெக்சிகோவின் லியோனல் கார்டெனாஸிடம் 92 நிமிடப் போராட்டத்தில் தோல்வியடைந்தார்.




