கோலாலம்பூர், மார்ச் 8 - மக்களவையில் கடந்த மாதம் 27ஆம் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்ற அரச உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்தில் 160 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு உரையாற்றினர்.
ஏழு நாட்கள் நடைபெற்ற இந்த விவாதத்தில் ஆளும் கட்சி உறுப்பினர்கள் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கல்வி, பொருளாதாரம், வாழ்க்கைச் செலவினம், சுற்றுலா, மற்றும் சபா, சரவா ஆகிய மாநிலங்களின் வளர்ச்சி உள்ளிட்ட விவகாரங்களைப் பற்றி தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.
இந்த விவாதத்தின் போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்குச் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் எதிர்வரும் திங்கட்கிழமை தொடங்கி நான்கு நாட்களுக்குப் பதிலளிப்பர் என்று நாடாளுமன்ற அகப்பக்கத்தில் இடம் பெற்றுள்ள நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு வார கூட்டத் தொடரின் போது பல்வேறு சுவாரஸ்மான சம்பவங்களும் நடைபெற்றன. பிரதமர் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்தார் எனக் குற்றஞ்சாட்டியதற்காகத் தாசேக் குளுகோர் பெரிக்கத்தான் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ வான் சைபுல் வான் ஜான் ஆறு மாதங்களுக்கு அவையிலிருந்து தற்காலிக நீக்கம் செய்வதற்குரிய சூழல் ஏற்பட்டதும் அதில் அடங்கும்.
வாய்மொழிக் கேள்வி பதில் அங்கத்திற்குப் பிறகு வான் சைபுலை இடைநீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடி முன்வைப்பார் என கடந்த மார்ச் 5ஆம் தேதியிட்ட நாடாளுமன்ற வரிசை முறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மக்களவையை திசை திருப்புவதற்காக வான் சைபுல் மாட்சிமை தங்கிய பேரரசரின் பெயரையும் தவறாகப் பயன்படுத்தியாகக் கூறப்படுகிறது.
எனினும், அகமது ஜாஹிட் அந்த தீர்மானத்தை முன்வைப்பதற்கு முன்னர் வான் சைபுல் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து ஜாஹிட் அந்த தீர்மானத்தை மீட்டுக் கொண்டார்.




