புத்ராஜெயா, மார்ச் 7- மலேசிய பயனீட்டாளர் நடுவர் மன்றம் வழங்கிய
தீர்ப்பை மதித்து நடக்கத் தவறியதாக உம்ரா பயணச் சேவையை
மேற்கொள்ளும் நிறுவனம் மற்றும் அதன் இயக்குநர் மீது இங்குள்ள
மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டது.
மாஜிஸ்திரேட் இர்ஸா ஜூலைக்கா ரோஹானுடின் முன்னிலையில்
கொண்டு வரப்பட்ட இக்குற்றச்சாட்டை பெர்சாடா ஓஹாசிஸ் டிராவல்
அண்ட டூவர்ஸ் சென். பெர்ஹாட் நிறுவனத்தின் பிரதிநிதியும் அதன்
இயக்குநருமான முகமது பிர்டாவுஸ் அகமது (வயது 38) மறுத்து
விசாரணை கோரினார்.
நான்கு பிரதிவாதிகளுக்கு மொத்தம் 60,929 வெள்ளியை இழப்பீடாக வழங்க
வேண்டும் என்ற பயனீட்டாளர் நடுவர் மன்றத்தின் தீர்ப்பை பின்பற்றத்
தவறியதாகப் பிர்டாவுஸ் நான்கு குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.
கடந்தாண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி இங்குள்ள பயனீட்டாளர் நடுவர்
மன்றத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர் மீது
குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் கூடுதல் பட்சம் 10,000 வெள்ளி
அபராதம் அல்லது ஈராண்டுச் சிறை விதிக்க வகை செய்யும் 1999ஆம்
ஆண்டு பயனீட்டாளர் பாதுகாப்புச் சட்டத்தின் 117(1)வது பிரிவின் கீழ் அவர்
மீது குற்றச்சாட்டு கொண்டு வரப்பட்டுள்ளது.
நான்கு குற்றச்சாட்டுகளுக்கும் 5,000 வெள்ளி ஜாமீனில்
குற்றஞ்சாட்டப்பட்டவரை விடுவிக்க அனுமதி வழங்கிய மாஜிஸ்திரேட்
இந்த வழக்கின் மறு விசாரணையை வரும் ஏப்ரல் மாதம் 9ஆம் தேதிக்கு
ஒத்தி வைத்தார்.
மேலும் முகமது பிர்டாவுஸ் ஒவ்வொரு மாதமும் உள்நாட்டு வாணிக
மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சில் ஆஜராக வேண்டும் என்றும்
உத்தரவிடப்பட்டது.




