ஜோர்ஜ் டவுன், மார்ச் 7- பொதுப்பணித் துறை கீழ் நாடு முழுவதும்
மேற்கொள்ளப்பட்ட 746 திட்டங்களில் 16 மட்டுமே குத்தகையாளர்களின்
தாமதம் காரணமாகப் பிரச்சனைக்குரியவை என வகைப்படுத்தப்பட்டதாகப்
பொதுப்பணித்துறை துணையமைச்சர் டத்தோ ஸ்ரீ அகமது மஸ்லான்
கூறினார்.
குத்தகையாளர்கள் எதிர்நோக்கிய நிதிப் பிரச்சனை, கோவிட்-19
பெருந்தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகள், கட்டுமானப் பொருள் பற்றாக்குறை
மற்றும் துணைக் குத்தகையாளர்களை நியமிப்பதில் ஏற்பட்ட சிக்கல்கள்
ஆகியவை இந்த தாமதத்திற்கு முக்கிய காரணங்களாக விளங்குவதாக
அவர் சொன்னார்.
சுணக்கம் கண்ட மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பில் அடிக்கடி செய்திகள்
வெளிவருகின்றன. ஆனால் விகிதாசார அடிப்படையில் அது மிகக்
குறைவானதே. அதாவது மொத்தம் உள்ள 746 திட்டங்களில் 16 திட்டங்கள்
அல்லது 2.14 விழுக்காடு மட்டுமே பிரச்சனையை எதிர்நோக்கின. கடந்த
மாதம் அறிக்கையின் படி இந்த எண்ணிக்கை 2.88 விழுக்காடாக இருந்த
வேளையில் இம்மாதம் அத்து 2.14 விழுக்காடாகக் குறைந்துள்ளது என
அவர் குறிப்பிட்டார்.
பொதுப்பணி இலாகா தனது பணிகளை மிகச்சிறப்பான முறையில்
மேற்கொள்வதை இது காட்டுவதோடு திட்டங்களையும் வெற்றிகரமாக
முடித்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
பினாங்கு உயர் நீதிமன்றக் கட்டிடத்தை தரம் உயர்த்தும் மற்றும்
பராமரிக்கும் பணிகளை இன்று பார்வையிட்டப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைத் கூறினார்.
சுமார் 119 ஆண்டுகள் பழைமை வாய்ந்த அந்த இரட்டை மாடி பாரம்பரியக்
கட்டிடம் 1 கோடியே 79 லட்சம் வெள்ளி செலவில் புதுப்பிக்கப்படுகிறது.
கடந்த 2021 டிசம்பர் மாதம் தொடங்கப்பட்ட இப்பணிகள் இவ்வாண்டு
ஜூலை மாதம் 13ஆம் தேதி முற்றுப் பெறும்.




