கோலாலம்பூர், மார்ச் 7- “குட்நைட் மலேசியா, 370“- கடந்த 2014ஆம் ஆண்டு
மார்ச் மாதம் 8ஆம் தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் எம்.எச்.370 விமானத்தின்
விமானி அறையிலிருந்து கடைசியான வெளியான ரேடியோ சமிக்ஞை
இது.
மர்மம் நிறைந்த அந்த இரவு கடந்து நாளையுடன் பத்தாண்டுகள் நிறைவு
பெறுகின்றன. எந்தவொரு தடயமும் இன்றி மாயமான முறையில்
மறைந்து போன அந்த போயிங் 777 விமானத்தில் பயணம் செய்த 239
பேரின் நிலை இன்று வரை யாருக்கும் தெரியாதப் புதிராகவே உள்ளது.
கோலாலம்பூரிலிருந்து பெய்ஜிங் நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த
அந்த விமானம் அன்றைய தினம் பின்னிரவு 1.30 மணியளவில்
வியட்னாம்-மலேசிய வான் எல்லையில் பறப்பது கண்டு பிடிக்கப்பட்டாலும்
அவ்விமானத்திலிருந்து எந்த எச்சரிக்கை சமிக்ஞையும் வராதது விடை
காண முடியாத கேள்விகளுக்கு வித்திட்டுள்ளது.
அந்த விமானத்தின் மர்மமான மறைவு உலகிலுள்ள பல்வேறு வான்
போக்குவரத்து விசாரணை அமைப்புகளின் கவனத்தை ஈர்த்துள்ளதோடு
தேடுல் பணியில் பல்வேறு உதவிகளையும் ஆலோசனைகளையும்
வழங்கியுள்ளன.
இந்த விமானத்தைக் கண்டு பிடிப்பதற்காக 232,040 சதுரகிலோ மீட்டர்
பரப்பளவு கொண்ட பகுதியில் 1,169 தினங்கள் தேடுதல் நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பணியில் மொத்தம் 82 விமானங்கள், 84
கப்பல்களை உள்ளடக்கிய இந்த நடவடிக்கையில் 26 நாடுகள் பங்கேற்றன.
நாட்டின் வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் அதிகப் பொருள் செலவிலான
தேடுதல் நடவடிக்கையாக இது விளங்குகிறது.
ஐந்தாண்டு கால தேடுதல் நடவடிக்கை கடந்த 2018ஆம் ஆண்டு மே மாதம்
நிறுத்தப்பட்டது. எனினும், புதிய மற்றும் வலுவான ஆதாரங்கள் கிடைக்கும் பட்சத்தில் காணாமல் போன அந்த விமானம் தொடர்பான விசாரணை தாங்கள் மீண்டும் தொடரத் தயாராக இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அளித்துள்ள வாக்குறுதி இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விமானத்தை தேடி கண்டு பிடிப்பதற்கு ஏதுவாக ஓஷியன் இன்பினிட்டி நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் செய்வதற்கு அமைச்சரவையின் அனுமதி பெறப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் அண்மையில் கூறியிருந்தார்.




