ஷா ஆலம், மார்ச் 7- சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை
தொடர்ந்து அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு பொது
போக்குவரத்தை தரம் உயர்த்துவதற்கான முயற்சிகளை துரிதப்படுத்தும்படி
அரசாங்கத்தை பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சியேன்
சுங் வலியுறுத்தியுள்ளார்.
மோசமான பொது போக்குவரத்து முறையின் காரணமாக தனியார்
வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது இந்த மரண
விபத்துகளின் எண்ணிக்கை உயர்வுக்கு காரணமாக விளங்குவதாக
கெஅடிலான் கட்சியின் பிரதிநிதியான அவர் அறிக்கை ஒன்றில்
தெரிவித்தார்.
பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் சாலை
விபத்துகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளது என ஆய்வுகள் வழி
நிரூபணமாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தடுக்கக்கூடிய மரணங்களைக் குறைப்பதற்கு ஏதுவாக கிள்ளான்
பள்ளத்தாக்கு, பினாங்கு, ஜோகூர் பாரு, கூச்சிங், கோத்தா கினபாலு
தொடங்கி நாட்டின் முக்கிய நகரங்களில் பொது போக்குவரத்தை தரம்
உயர்த்துவதற்கான முயற்சிகளை அதிகப்படுத்தும்படி அரசாங்கத்தை நான்
கேட்டுக் கொள்கிறேன்.
பினாங்கு மற்றும் ஜோகூர் பாருவில் மேற்கொள்ளப்படும் எம்.ஆர்.டி.3
போன்ற மெகா திட்டங்கள் தவிர்த்து பஸ் சேவையை அதிகரிப்பது,
சைக்கிள் தடங்களை அமைப்பது, பாதசாரிகளுக்கான நடைபாதைகளை
உருவாக்குவது போன்ற திட்டங்களையும் முன்னெடுக்கலாம் என அவர்
சொன்னார்.
இத்தகையத் திட்டங்கள் தற்போது புறக்கணிக்கப்பட்டு வருவது குறித்து
ஏமாற்றம் தெரிவித்த அவர், நாட்டின் பொது போக்குவரத்து முறையை நிர்வகிக்கும் முழு அதிகாரம் போக்குவரத்து அமைச்சுக்கு வழங்கப்பட வேண்டும் என்றார்.




