சைபர்ஜெயா, மார்ச் 7- தடை செய்யப்பட்ட இடங்களில் சிகிரெட் பிடித்த
குற்றத்திற்காக 1983ஆம் ஆண்டு உணவுச் சட்டத்தின் 32(பி) பிரிவின் கீழ்
214 குற்ற அறிக்கைகளை சுகாதார அமைச்சு வெளியிட்டது.
நேற்று முன்தினம் தொடங்கி இரு தினங்களுக்கு நடத்தப்பட்ட இந்த
சோதனை நடவடிக்கைகளின் வாயிலாக 54,050 வெள்ளி அபராதத்
தொகையை உள்ளடக்கிய அந்த குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டதாகச்
சுகாதாரத் துறை (சுகாதாரம்) துணைத் தலைமை இயக்குநர் டத்தோ
டாக்டர் நோர்ஹயாத்தி ருஸ்லி கூறினார்.
அந்த குற்றப்பதிவுகளில் 110 உணவகங்களிலும் 48 குற்றப்பதிவுகள்
பேரங்காடிகளிலும் 20 குற்றப்பதிவுகள் பொது இடங்களிலும்
வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.
இவை தவிர, புகைப்பிடிக்கக் கூடாது என்ற அறிவிப்பு பலகையை
வைக்கத் தவறியதற்காக 29 குற்ற அறிக்கைகளும் தங்கள் வளாகங்களில்
யாரும் புகைப்பிடிக்காமலிருப்பதை உறுதி செய்யத் தவறியதற்காக ஐந்து
குற்ற அறிக்கைகளும் வெளியிடப்பட்டன என்று அவர் தெரிவித்தார்.
நேற்று சைபர் ஜெயா வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட பொது இடங்களில்
புகைப் பிடிப்போருக்கு எதிரான சோதனை நடவடிக்கையில் கலந்து
கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.
பொது இடங்களில் புகைப் பிடிக்கும் குற்றங்களுக்கு எதிராக கடந்தாண்டு
16,046 சோதனை நடவடிக்கைகளும் இவ்வாண்டு ஜனவரி முதல் 1,568
சோதனை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன என்று அவர்
சொன்னார்.
நாட்டிலுள்ள ஐந்து மாநிலங்களில் அதாவது சிலாங்கூர் (750), ஜோகூர் (743),
பினாங்கு (595), சரவா (586) மற்றும் பகாங் (519) ஆகியவற்றில் அதிகளவில்
குற்றப்பதிவுகள் வெளியிடப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.




