ஷா ஆலம், மார்ச் 6 - மலாய் ஆட்சியாளர்களுக்கு எதிராக அவதூறு
பரப்பப்படும் விவகாரத்தில் சிலாங்கூர் மாநில பெரிக்கத்தான் நேஷனல்
மௌனம் சாதித்து வருவதை ஆட்சேபிக்கும் வகையில் செலாட் கிள்ளான்
தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மந்திரி புசார் தலைமைத்துவத்திற்குத்
தனது ஆதரவைப் புலப்படுத்தியுள்ளார்.
இந்த முடிவினை தாம் உளப்பூர்வமாக எடுத்ததாகக் கூறிய டத்தோ
அப்துல் ரஷிட் அசாரி, அந்த கூட்டணியின் இந்தச் செயல் மலாய் மற்றும்
இஸ்லாமிய சமயத்தின் கோட்பாடுகளுக்கு முரணாகவும் உள்ளதாகத்
தெரிவித்தார்.
தாம் இம்முடிவினை எடுக்கும் போது மேம்பாடு மற்றும் மக்களின்
சுபிட்சத்தை நோக்கி சரியான தடத்தில் மந்திரி புசார் டத்தோஸ்ரீ
அமிருடின் ஷாரியின் தலைமைத்துவம் பயணிக்கிறது என்ற மேன்மை
தங்கிய சிலாங்கூர் சுல்தானின் பாராட்டுதலையும் கவனத்தில்
கொண்டதாக அவர் அறிக்கை ஒன்றில் கூறினார்.
மலாய் ஆட்சியாளர்களுக்கு எதிராக பரப்ப்படும் அவதூறுகள் குறித்து
பெரிக்கத்தான் தலைவர்கள் குறிப்பாகச் சிலாங்கூர் மாநில பொறுப்பாளர்கள்
மௌனம் காத்து வருவதை ஆட்சேபிக்கும் வகையிலும் தாம் இந்த
முடிவை எடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
நிலையான மற்றும் ஒற்றுமையான அரசாங்கத்தின் மூலம் மாநில மக்கள்
குறிப்பாக செலாட் கிள்ளான் தொகுதியைச் சேர்ந்தவர்கள் சுபிட்சம்
பெறுவதை உறுதி செய்வதும் தமது இந்த முடிவுக்கான காரணமாகும் என
அவர் குறிப்பிட்டார்.
எனினும், தாம் தொடர்ந்து பெர்சத்து கட்சியின் உறுப்பினராக இருந்து
வரப்போவதோடு செலாட் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும்
வகித்து வரப்போவதாக அவர் சொன்னார்.




