ஷா ஆலம், மார்ச் 6 - சபா மாநிலத்தில் நீர் விநியோகப் பிரச்சனைக்குத்
தீர்வு காண 30 கோடி வெள்ளியை கடனாக வழங்க கடந்தாண்டு
செப்டம்பர் 27ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்
வாயிலாக மத்திய அரசு ஒப்புதல் அளித்தது.
இந்த பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு ஏதுவாக மேலும் 10 கோடி
வெள்ளியை பொருளாதார அமைச்சிடம் எரிசக்தி மாற்றம் மற்றும் நீர்
உருமாற்றத் துறை (பெட்ரா) அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளதாகத்
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசுப் கூறினார்.
சபா மாநிலத்தில் நிலவும் நீர் விநியோகப் பிரச்சனைக்குக் குறுகிய காலத்
தீர்வை காண்பதற்காக நான்காவது சுழல் திட்டம் மற்றும் 12வது
மலேசியத் திட்டத்தின் கீழ் 20 கோடி வெள்ளி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அங்கீகரிக்கப்பட்ட திட்டங்கள் யாவும் முறையாக மேற்கொள்ளப்படுவதை
உறுதி செய்வதற்கு ஏதுவாக அடிக்கடி கள வருகை மேற்கொள்வது
மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளுடன் சந்திப்பு நடத்துவது போன்ற
நடவடிக்கைகளை அமைச்சு மேற்கொண்டு வரும் என்றும் அவர்
குறிப்பிட்டார்.
மக்களவையில் இன்று கினபாத்தாங்கான் தொகுதி உறுப்பினர் டத்தோஸ்ரீ
புங் மொக்தார் ராடின் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர்
இவ்வாறு தெரிவித்தார்.
இதனிடையே, தொடர் திட்டங்களை மேற்கொள்வதற்காக நான்காவது
சுழல் திட்டத்தின் கீழ் 16 கோடியே 35 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளியை
சபா மாநில அரசு ஒதுக்கியுள்ளதாகவும் பாடில்லா சொன்னார்.
இந்த பிரச்சனைக்கு நீண்ட கால அடிப்படையில் தீர்வு காணும் வகையில் அடுத்து வரும் சுழல் திட்டங்களிளில் சபா அரசாங்கம் கூடுதல் நிதியைக் கோரலாம் என்று எரிசக்தி மாற்றம் மற்றம் நீர் உருமாற்றத் துறை அமைச்சருமான அவர் கூறினார்.




