ஜோகூர் பாரு, மார்ச் 6 - இங்குள்ள பாசீர் கூடாங் நெடுஞ்சாலையில்
தாமான் பெர்மாஸ் ஜெயா அருகே நேற்றிரவு நிகழ்ந்த நான்கு வாகனங்கள்
சம்பந்தப்பட்ட சாலை விபத்தில் மூதாட்டி உள்பட மூவர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் நேற்றிரவு 11.41 மணியளவில் தகவல்
கிடைத்தத்தைத் தொடர்ந்து ஜோகூர் ஜெயா மற்றும் தெப்ராவ் தீயணைப்பு
நிலையங்களிலிருந்து மீட்பு வாகனங்கள் மற்றும் அவசர உதவி
வாகனங்களுடன் ஒன்பது உறுப்பினர்கள் கொண்டு குழுவினர் சம்பவ
இடத்திற்கு விரைந்ததாக ஜோகூர் ஜெயா தீயணைப்பு மற்றும் மீட்பு
நிலையத்தின் தலைவர் முதன்மை அதிகாரி 11 எம். ஹரிதாஸ் கூறினார்.
இந்த விபத்தில் ஸ்கேனியா ரக டிரெய்லர் லோரி மற்றும் பெரேடுவா
மைவி, பெரேடுவா அல்சா மற்றும் ஹோண்டா சிவிக் ஆகிய மூன்று
கார்கள் சம்பந்தப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
இந்த விபத்தில் ஹோண்டா சிவிக் காரின் ஓட்டுநரான 45 வயது ஆடவர்
அதில் பயணம் செய்த 75 வயது மூதாட்டி மற்றும் புரோடுவா அல்சா
காரின் ஓட்டுநரான 46 வயது நபர் ஆகியோர் உயிரிழந்தது உறுதி
செய்யப்பட்டதாக இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் அவர்
சொன்னார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் சவப்பரிசோதனைக்காகச்
சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட
வேளையில் காயங்களுக்குள்ளான பெரேடுவா மைவி ஓட்டுநர் மற்றும்
டிரெய்லர் ஓட்டுநர் ஆகியோர் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக
அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.




