ஷா ஆலம், பிப் 6 - போதைப் பொருளை வைத்திருந்தது உள்பட பல்வேறு
குற்றங்களுக்காக உள்நாட்டு மீன்பிடி படகு ஒன்றை சிலாங்கூர் மாநில
கடல்சார் அமலாக்க நிறுவனம் சிகிஞ்சான் கடல் பகுதியில் கடந்த
ஞாயிற்றுக்கிழமை தடுத்து வைத்தது.
ரோந்து நடவடிக்கையை மேற்கொண்டிருந்த போது பி1 பிரிவைச் சேர்ந்த
அந்த படகை சிகிஞ்சானின் மேற்கே 10.8 கடல் மைல் தொலைவில்
தாங்கள் தடுத்து நிறுத்தியாகச் சிலாங்கூர் மாநில கடல்சார் நிறுவனத்தின்
இயக்குநர் கேப்டன் மெரிடைம் அப்துல் முஹைமின் சாலே கூறினார்.
அந்த படகை ஆடவர் ஒருவர் செலுத்திய வேளையில் 30 முதல் 38 வயது
வரையிலான மூன்று மியன்மார் பிரஜைகள் மீன் பிடிக்கும் பணியில்
ஈபட்டிருந்ததாக அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார்.
அந்த படகின் மீது மேற்கொள்ளப்பட்டச் சோதனையில் போதைப்
பொருளை உட்கொள்ள பயன்படும் மூன்று உபகரணங்கள், ஷாபு என
சந்தேகிக்கப்படும் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்ட மூன்று கிராம்
பளிங்கு நிற பொருள், இருமல் மருந்து, மூன்று கிலோ எடையுள்ள
கெத்தும் இலைகள் அடங்கிய பிளாஸ்டிக் பொட்டலம் ஆகிய
கண்டுபிடிக்கப்பட்டன என்று அவர் சொன்னார்.
இது தவிர அந்த படகின் முன்புறம் மாற்றியமைக்கப்பட்ட டாங்கியில்
வைக்கப்பட்டிருந்த 400 லிட்டர் டீசலும் இந்நடவடிக்கையின் போது
பறிமுதல் செய்யப்பட்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பல்வேறு குற்றங்களுக்காக 1952ஆம் ஆண்டு போதைப் பொருள் சட்டம்,
1952ஆம் ஆண்டு விஷச் சட்டம் மற்றும் 1985ஆம் ஆண்டு மீன்பிடிச் சட்டம்
ஆகியவற்றின் கீழ் அவர்களுக்கு எதிராக விசாரணை மேற்கொள்ளப்பட்டு
வருகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், முறையான ஆவணங்கள் இன்றி அந்நிய நாட்டினரை
வேலைக்கமர்த்தியதற்காக 1959/63ஆம் ஆண்டு குடிநுழைவுச் சட்டத்தின்
கீழும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார் அவர்.




