கோலாலம்பூர், மார்ச் 6 - பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம் கோலாலம்பூருடனான தனது பயண இணைப்பை எதிர்வரும் நவம்பர் மாதம் மீண்டும் தொடங்கவுள்ளது. இது நோய்த் தொற்றுப் பரவலுக்குப் பின் ஆசியாவுக்கான பயண ஒருங்கமைப்பை விரிவுபடுத்தும் அந்த விமான நிறுவனத்தின் உறுதிப்பாட்டை மேலும் நிரூபிக்கிறது.
மலேசிய தலைநகர் மற்றும் லண்டன் ஹீத்ரோ இடையே போயிங் பி 787-9 விமானம் தினசரி சேவையை வழங்கும் என்று அவ்விமான நிறுவனம் அறிக்கை தெரிவித்துள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் 700 கோடி பிரிட்டிஷ் பவுண் (4,200 கோடி வெள்ளி ) மதிப்பில் மேற்கொள்ளப்படவிருக்கும் உருமாற்றம் மற்றும் பல்வேறு நவீனமயமாக்கல் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது என அது கூறியது.
இதற்கிடையில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் கடைசியாகக் கடந்த 2020 இல் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முதலாவது முனையத்திற்கு வந்ததாக மலேசியா ஏர்போர்ட்ஸ் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் தெரிவித்துள்ளது.
இதனிடையே, இந்த அறிவிப்பு பற்றி கருத்துரைத்த மலேசியாவுக்கான பிரிட்டிஷ் தூதர் ஐல்சா டெர்ரி, லண்டனுக்கும் கோலாலம்பூருக்கும் இடையில் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நேரடி விமானச் சேவையை மீண்டும் தொடங்குவது இங்கிலாந்து மற்றும் மலேசியா இடையே வளர்ந்து வரும் நட்புறவைப் பிரதிபலிக்கிறது என்றார்.
இது எங்கள் இருதரப்பு வர்த்தகத்தில் சுமார் 600 கோடி பிரிட்டிஷ் பவுண் (3,600 கோடி வெள்ளி) உள்ளடக்கியிருக்கும். இவ்வாண்டின் பிற்பகுதியில் டிரான்ஸ்-பசிபிக் பங்காளித்துவத்திற்கான விரிவான மற்றும் முற்போக்கு ஒப்பந்தத்தின் ஒப்புதலை நிறைவு செய்யும் போது அபரிமிதமான வளர்ச்சி மேலும் சாத்தியமாகும் என்று அவர் பெர்னாமாவுக்கு அளித்தப் பேட்டியில் குறிப்பிட்டார்.




