ஷா ஆலம், மார்ச் 5: பொருள் சேவை வரியை (ஜிஎஸ்டி) மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் எதனையும் அரசாங்கம் கொண்டிருக்கவில்லை என்று நிதியமைச்சர் II கூறினார்.
மக்கள், குறிப்பாக குறைந்த வருமானம் கொண்டவர்கள் தற்போதைய வாழ்க்கை செலவுச் சவாலை எதிர் கொள்வதால் ஏற்படும் பாதிப்பை அரசாங்கம் கருத்தில் கொள்கிறது என டத்தோஸ்ரீ அமீர் ஹம்சா அசிசான் கூறினார்.
"ஜிஎஸ்டியை மீண்டும் அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிடவில்லை, ஏனெனில் இது பரந்த அடிப்படையிலான நுகர்வு வரி என்பதால், அதை செயல்படுத்த இது சரியான நேரம் அல்ல.
இன்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கேள்வி அமர்வில் டத்தோ சையட் அபு ஹுசின் ஹபீஸ் சையட் அப்துல் பசால் (புக்கிட் கந்தாங்) என்பவரின் துணைக் கேள்விக்கு அவர் இவ்வாறு கூறினார்.
தற்போது உள்ள வரி முறையை மேம்படுத்துவதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது, காரணம் அவை மக்களுக்கு குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய குழுவில் உள்ளவர்களுக்குச் சுமையாக இருக்க கூடாது என அவர் கூறினார்
"ஜிஎஸ்டி வரி போன்ற புதிய நுகர்வு வரிகளை அறிமுகப்படுத்துவதற்கு முன், மக்களை பாதிக்காத வரிகளை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
"எனவே, இது நாட்டின் வருவாயை அதிகரிக்க அரசாங்கம் எடுத்துள்ள அணுகுமுறையாகும். முதலில் அதிக திறன் கொண்டவர்களுக்கு வரி முறையை விரிவுபடுத்துவதன் மூலம் இது கட்டம் கட்டமாக செயல்படுத்தப்படும்," என்று அவர் கூறினார்.








