ஷா ஆலம், மார்ச் 5: தொழில்நுட்பக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி (TVET) பட்டதாரிகளுக்கு குறைந்தபட்ச வருமானம் RM4,000 மற்றும் அதற்கு மேல் வழங்கும் வகையில் சிறப்பு சம்பளச் சட்டம் இயற்றப்படும்.
ஜூன் 2 ஆம் தேதி, தேசிய திவேட் கொள்கை தொடங்கியதற்கு ஏற்ப தொழில் துறையை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த முன்மொழிவு இருப்பதாகத் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அஹ்மட் ஜாஹிட் ஹமிடி கூறினார்.
இந்த கொள்கையின் மூலம், அமைச்சகம் மற்றும் மேற்பார்வை முகவர் இடையே குழப்பம் மற்றும் கருத்து வேறுபாடுகளை தவிர்க்க ஒரே ஒரு திவேட் அங்கீகார மையம் நிறுவப்படும் என்று அவர் கூறினார்.
"நாங்கள் சம்பள அம்சத்தையும் பார்க்கிறோம். பிரீமியம் சம்பளம் என்பது குறைந்தபட்ச சம்பளத்தின் அடிப்படையில் அல்ல, ஆனால் RM4,000 மற்றும் அதற்கு மேல் அதிகமாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
"இத்திட்டம் மாணவர்களைத் திவேட் நிறுவனத்தில் சேர மறைமுகமாக ஊக்குவிக்கிறது," என்று அவர் நாடாளுமன்ற அமர்வில் எழுந்த கேள்விக்குப் பதிலளித்தார்.
இதற்கிடையில், திவேட் திட்டமும் மூன்றாம் பருவத்திற்கு பிறகு தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் இணைக்கப்படும் என்று மேலும் அவர் விளக்கினார்.




