ஷா ஆலம், மார்ச் 4 - சிலாங்கூரில் நீண்ட காலைக் கட்டமைப்பைக்
கொண்ட சட்டமன்றத் தொகுதிகளுக்குச் சாலை பராமரிப்பு மற்றும்
பழுதுபார்ப்பு பணிகளுக்காகக் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்று மாநில
சட்டமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டது.
தற்போது ஊராட்சி மன்றங்கள் வாயிலாக பராமரிப்பு பணிகளை
மேற்கொள்வதற்கு ஏதுவாக அனைத்து தொகுதிகளுக்கும் சரிசமமாக
ஆண்டுக்கு 30 லட்சம் வெள்ளியை வழங்கும் தற்போதைய
நடைமுறையைக் காட்டிலும் இது மாறுபட்டது என்று அடிப்படை வசதிகள்
துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் இஷாம் ஹஷிம் கூறினார்.
அந்தந்த தொகுதிகளில் உள்ள சாலைகளின் நீளம் மற்றும் சம்பந்தப்பட்ட
பகுதிகளின் தேவை ஆகியவற்றின் அடிப்படையில் நியாயமான நிதி
ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்வதற்காக இந்நடவடிக்கை
மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் சொன்னார்.
இந்த திட்டத்தை அமல்படுத்த நாங்கள் ஏற்கனவே திட்டமிட்டிருந்தோம்.
எனினும், அது குறித்த அறிவிப்பை வெளியிடவில்லை. அண்மையில்
மந்திரி பெசாருடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போது இது குறித்து
விவாதித்தோம் என்று அவர் தெரிவித்தார்.
பழுதடைந்த சாலைகளை அடையாளம் கண்டு மறுசீரமைப்பு
செய்வதற்காக மாநிலத்திலுள்ள அனைத்து தொகுதிகளுக்கும் முன்பு தலா
30 லட்சம் வெள்ளி வழங்கப்பட்டு வந்தது. சில தொகுதிகளில் அதிக
சாலைகள் இல்லாததையும் கிடைக்கும் நிதியைக் கொண்டு அவை ஆண்டுதோறும் அதே சாலைகளை மீண்டும் மீண்டும் செப்பனிடப்படுவதையும் கண்டறிந்தோம் என்றார் அவர்.
இதனைக் கருத்தில் கொண்டு இந்த மானியத்தை ஒருங்கிணைத்து சாலைகளின் நீளத்தை அடிப்படையாகக் கொண்டு நிதிப்பகிர்வை இவ்வாண்டு தொடங்கி மேற்கொள்ளவிருக்கிறோம் என்று அவர் குறிப்பிட்டார்.
மாநில சட்டமன்றத்தில் இன்று தொகுதிகளுக்கான நிதி ஒதுக்கீட்டை
மாநில அரசு மறுஆய்வு செய்யவுள்ளதாக என சுபாங் ஜெயா உறுப்பினர்
மிஷல் இங் மேய் ஸி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர்
இவ்வாறு சொன்னார்.




