ஷா ஆலம், மார்ச் 1 - கடந்த 2021 முதல் 2023 வரை சிலாங்கூரில் நீரை மாசுபடுத்தும் குற்றங்களைப் புரிந்தவர்களுக்கு மொத்தம் 700,000 வெள்ளிக்கான குற்றப் பதிவுகள் வெளியிடப்பட்டன.
மாநிலத்தில் நீடித்து வரும் நீர் தூய்மைக்கேடு பிரச்சனைக்குத் தீர்வு காண மாநில அரசு மேற்கொண்டு வரும் தீவிர முயற்சியின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை அமைந்துள்ளது.
இத்தகைய நீர் மாசுபாடு குற்றங்களுக்காக கடந்த 2017 முதல் 2020 வரை வழங்கப்பட்ட 10,000 வெள்ளி அபராதத் தொகையைக் காட்டிலும் இது கணிசமான அளவு அதிகமாகும் என்று
பொது சுகாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
இத்தகையக் குற்றங்களைப் புரிந்தவர்கள் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட வேண்டும் என்பதை ஒப்புக் கொண்ட அவர், சட்டச் செயல்முறை அதிக காலத்தை எடுத்துக்கொள்வதோடு அதிகாரிகள் நடத்தும் விசாரணைகளைச் சார்ந்ததும் உள்ளது என்றார்.
அண்மைய ஆண்டுகளில், மாநில அரசு குற்றப்பதிவுகளை வழங்குவதில் அதிக கவனம் செலுத்துகிறது. ஏனெனில் இது எளிதானதாகவும் விரைவாகச் செய்யக் கூடியதாகவும் உள்ளது அவர் இன்று மாநில சட்டமன்றத்தில் கூறினார்.
சில பெரிய வழக்குகள் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும் என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நாங்கள் அதை மட்டும் சார்ந்திருக்க முடியாது. மேலும், குற்றச்சாட்டுகள் குறித்து நான் முடிவு செய்யவில்லை என அவர் குறிப்பிட்டார்.
தண்ணீரை மாசுபடுத்துபவர்களுக்கு எதிராக அபராதம் மட்டும் விதிக்காமல் கடுமையான நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்ற தாமான் மேடான் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் அஃபிப் பஹார்டினின் பரிந்துரைக்கு பதிலளித்த போது ஜமாலியா இவ்வாறு சொன்னார்.
இப்போது நீர் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வை மக்களிடையே, குறிப்பாக குறிப்பாக தொழிற்சாலை உரிமையாளர்களிடையே ஏற்படுத்துவதில் மாநில அரசு தீவிர கவனம் செலுத்துகிறது என்றும் அவர் கூறினார்.




