கோலாலம்பூர், மார்ச் 1- போலி கடப்பிதழை வைத்திருந்த குற்றத்திற்காக
வங்காளதேச பெண் ஒருவருக்கு எதிராக நடவடிக்கை
எடுக்காமலிருப்பதற்காக 11,700 வெள்ளியை லஞ்சமாக பெற்றதாக நான்கு
போலீஸ்காரர்களுக்கு எதிராக இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில்
நேற்று குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிபதி சுஸானா ஹூசேன் முன்னிலையில் தங்களுக்கு எதிராக கொண்டு
வரப்பட்டக் குற்றச்சாட்டை கார்ப்ரல் முகமது ஃபாரிடுடின் இப்ராஹி (வயது
43), சார்ஜன் முகமது ஹஷிபுடின் முகமது நோர்டின், (வயது 39), லான்ஸ்
கார்ப்ரல் முகமது சுஹைரி ஹஷிம் (வயது 30) மற்றும கார்ப்ரல் மேத்தியு
கிலாட் (வயது 36) ஆகிய நால்வரும் மறுத்து விசாரணை கோரினர்.
போலி கடப்பிதழை வைத்திருந்த குற்றத்திற்காக பைஷாக்கி அக்தார் மிம்
என்ற வங்காளதேச பெண்ணுக்கு எதிராக நடவடிக்கை
எடுக்காமலிருப்பதற்காக முகமது மசூட் அப்துல் லத்திப் என்பவரிடமிருந்து
11,700 வெள்ளியை கையூட்டாகப் பெற்றதாக அவர்கள் குற்றச்சாட்டை
எதிர்நோக்கியுள்ளனர்.
கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் 21ஆம் தேதி இரவு 9.00 மணிளவில் ஜாலான்
துன் ரசாக் போலீஸ் நிலையத்தில் இக்குற்றத்தைப் புரிந்ததாக அவர்கள்
மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
அவர்கள் 2009ஆம் ஆண்டு மலேசிய ஊழல் தடுப்புச் சட்டத்தின் 16(ஏ)(பி)
பிரிவு மற்றும் குற்றவியல் சட்டத்தின் 34 பிரிவின் கீழ் குற்றச்சாட்டை
எதிர்நோக்கியுள்ளனர். இப்பிரிவுகளின் கீழ் குற்றவாளி என
நிரூபிக்கப்படுவோருக்கு 20 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை,
அபராதம் மற்றும் லஞ்சத் தொகையில் ஐந்து மடங்கு அல்லது 10,000
வெள்ளி இவற்றில் அதிகத் தொகை அபராதமாக விதிக்கப்படும்.
குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரையும் தலா ஒரு நபர் உத்தரவாதத்துடன்
6,000 வெள்ளி ஜாமீனில் விடுவிக்க அனுமதி வழங்கிய நீதிபதி, வழக்கு
விசாரணையை வரும் ஏப்ரல் 25ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.




