ஈப்போ, பிப் 29 – இங்குள்ள தாமான் உத்தாமா பெர்ச்சாம் குடியிருப்புப் பகுதியில் நேற்று காலையில் இருவருக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பின் இரு வாகனங்கள் தீக்கிரையான வேளையில் முதியவரும் ஒரு பெண்மணியும் தீக்காயங்களுக்கு உள்ளாகினர்.
இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 67 வயதுடைய ஆடவரும் 54 வயதுடைய பெண்ணும் தீக்காயங்களினால் சுயநினைவு இன்றி ராஜா பெர்மைசூரி பைபனுன் மருத்துவமனையில் சிகிசைக்க்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு கார் , மோட்டார் சைக்கிள் மற்றும் இருவரை உள்டக்கிய தீச்சம்பவம் குறித்து நேற்று காலை 10.18 மணியளவில் தாங்கள் அவரச அழைப்பைப் பெற்றதாக ஈப்போ மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி யாஹ்யா ஹசான் கூறினார்.
தகவல் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினரின் உதவியுடன் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தாக அவர் சொன்னார்.
ஒரு வீட்டிற்கு முன் ஒரு காரும் மோட்டார் சைக்கிளும் எரிந்த நிலையில் இருந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. அந்த தீச்சம்பவம் ஏற்படுவதற்கு முன் அவ்வீட்டில் வாக்குவாதமும் கூச்சலும் எழுந்ததை அண்டை வீட்டார் கேட்டுள்ளனர். அவ்விருவரும் வீட்டை விட்டு வெளியே வந்த போது அங்கு தீச்சம்பவம் ஏற்பட்டு அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.
கொலை முயற்சி தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 307 ஆவது விதியின் கீழ் இச்சம்பவம் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாஹ்யா தெரிவித்தார். உண்மையில் அவ்வீட்டில் என்ன நடந்தது என்பது குறித்து சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் போலீசார் வாக்குமூலம் பதிவு செய்ய விருக்கின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தீக்காயங்களுக்கான அவ்விருவரும் சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனையின் சிவப்பு மண்டலத்தின் தீவிர காண்காணிப்பு பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சொன்னார்.




