ஷா ஆலம், பிப் 29: சிலாங்கூரில் நீர் மாசுபாட்டை ஏற்படுத்தும் எந்த ஒரு தரப்பினருக்கும் அல்லது தனி நபருக்கும் கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும்.
பெரும்பாலும் நீர் விநியோகத்தில் ஏற்படும் இடையூறு பிரச்சனைகளுக்கு மாசுபாடு சம்பவங்களே காரணம் என்று டூசுன் துவா சட்டமன்ற உறுப்பினர் டத்தோ ஜோஹான் அப்துட் அசிஸ் கூறினார்.
"பெரும்பாலான நீர் விநியோக இடையூறுகள் மாசுபாடு சம்பவங்களால் ஏற்படுகின்றன. இதனால் நீர் சுத்திகரிப்பு நிலையம் துப்புரவு பணி முடியும் வரை மூடப்படும் சூழ்நிலை ஏற்படுகிறது," என்று அவர் கூறினார்.
நேற்று சிலாங்கூர் மாநில சட்டமன்ற விவாத அமர்வின் போது அவர் இவ்வாறு கூறினார்.
தற்போது வரை, நீரை மாசு படுத்துபவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக ரிம 500,000 அபராதம் மற்றும் ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.
சிலாங்கூரில் தண்ணீர் பயன்படுத்துவோர் தற்போது 6.2 மில்லியனாக இருப்பதாக மதிப்பிடப் பட்டிருப்பதாகவும், இதற்கு முன் ஏற்பட்ட தண்ணீர் நெருக்கடியைப் போல் முக்கியமான சவால்களை எதிர்கொள்ள மாநில அரசு தயாராக இருக்க வேண்டும் என்றும் ஜோஹன் கூறினார்.
"ஆனால், அதே நேரத்தில் நீர் சுத்திகரிப்பு நிலைய மேம்பாட்டுத் திட்டம் மற்றும் மூல நீர் உத்தரவாதத் திட்டத்துடன் கூடிய தயாரிப்புத் திட்டத்தையும் நான் பாராட்டுகிறேன்," என்று அவர் கூறினார்.




