கோலாலம்பூர், பிப் 29 - மக்களவையில் இன்று நடைபெறவுள்ள
விவாதங்களில் ரிங்கிட் மதிப்பு வீழ்ச்சி மற்றும் ஊழியர் சேம நிதி
வாரியத்தில் (இ.பி.எப்.) ஓய்வு பெற்றவர்கள் வைத்திருக்கும் சேமிப்பு
உள்ளிட்ட விவகாரங்கள் முக்கிய இடத்தைப் பெறும் என
எதிர்பார்க்கப்படுகிறது.
அவையின் கேள்வி பதில் அங்கத்தின் போது, ரிங்கிட்டின் மதிப்பு
தொடர்ந்து குறைந்து வருவது தொடர்பில் பாகான் தொகுதி பக்கத்தான்
ஹராப்பான் உறுப்பினர் லிம் குவான் எங் நிதியமைச்சரிடம்
கேள்வியெழுப்புவார் என்று நாடாளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ அகப்பத்தில்
வெளியிடப்பட்டுள்ள வரிசை முறை பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊழியர் சேம நிதி வாரியம் தொடர்பான கேள்வியை பாசீர் கூடாங்
தொகுதி பக்கத்தான் ஹராப்பான் உறுப்பினர் ஹசான் அப்துல் கரீம்
முன்வைப்பார். 45 வயதை அடைந்த இ.பி.எப். சந்தாதாரர்களில் 35
விழுக்காட்டினர் 10,000 வெள்ளிக்கும் குறைவான சேமிப்பை வைத்திருக்கும்
பிரச்சனைக்குத் தீர்வு காணபதற்கான வழிமுறைகள் குறித்து அவர்
வினவுவார்.
கேள்வி பதில் அங்கத்திற்குப் பிறகு கடந்த திங்கள்கிழமை மாட்சிமை
தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய அரச
உரை மீதான விவாதத்தில் உறுப்பினர்கள் கலந்து கொண்டு தங்கள்
கருத்துகளை முன்வைப்பர்.
இந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடர் கடந்த திங்கள்கிழமை தொடங்கி 19
நாட்களுக்கு நடைபெறும் என்று நாடாளுமன்ற அதிகாரப்பூர்வ
அகப்பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரச உரை மீதான விவாதங்கள்
இம்மாதம் 27 முதல் மார்ச் 7 வரை நடைபெறவுள்ள வேளையில் எதிர்வரும்
மார்ச் 11 தொடங்கி நான்கு நாட்களுக்குச் சம்பந்தப்பட்ட அமைச்சுகளின்
பதில் அங்கம் இடம் பெறும்.




