ஷா ஆலம், பிப் 29 - பல்வேறு சேவைகளை வழங்கக்கூடிய
ஒருங்கிணைந்த மையங்கள் அனைத்து தொகுதிகளிலும் அமைக்கப்பட
வேண்டும் என்று புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் ஆர். ராஜீவ்
பரிந்துரைத்துள்ளார்.
ஓரிட மையமாகச் செயல்படக்கூடிய இந்த ஒருங்கிணைந்த சேவை
மையங்களின் வாயிலாகப் பல்வேறு துறைகள் மற்றும் அரசு நிறுவனங்கள்
வழங்கக் கூடிய சேவைகளைப் பொது மக்கள் ஒரே குடையின் கீழ்
பெறுவதற்குரிய வாய்ப்பு கிட்டும் என்று அவர் சொன்னார்.
சிலாங்கூரில் அரசாங்க அலுவலகங்கள் வெவ்வேறு இடங்களில்
அமைந்துள்ளன. இலக்கவியல் யுகத்தில் நாம் நுழைந்துள்ள நிலையில்
அரசு நிறுவனங்கள், ஊராட்சி மன்றங்கள் மற்றும் இதர துறைகள்
வழங்கக்கூடிய சேவைகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வருவது
அவசியமாகும் என அவர் தெரிவித்தார்.
உதாரணத்திற்கு ஊராட்சி மன்றங்கள், நில மற்றும் மாவட்ட அலுவலகம்,
பெருங்குருசான் ஆயர் சிலாங்கூர் போன்றவை முகப்பிடச் சேவை
மையங்களை அமைக்கலாம் என்றார் அவர்.
மாநில சட்டமன்றத்தில் நேற்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான்
ஷராபுடின் இட்ரிஸ் ஷாவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம்
மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர்
இவ்வாறு குறிப்பிட்டார்.
மாநில அரசின் பணி மேம்பாடுகள் மற்றும் அமல்படுத்தப்பட்டுள்ள
திட்டங்கள் தொடர்பில் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் அடிக்கடி செய்தியாளர்
கூட்டங்களை நடத்தி மக்களுக்கு விளக்க வேண்டும் என்றும் அவர்
கேட்டுக் கொண்டார்.
அரசாங்கத்தின் முயற்சிகள் மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தப்பட
வேண்டும். ஒவ்வொரு வாரமும் மாநில ஆட்சிக்குழு கூட்டம் நடைபெறும்
போது அடர்த்தியான ஆவணங்கள் பரிசீலனைக்குட்படுத்தப்படுகின்றன. பல
முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டாலும் வெளியில் இருக்கின்ற நமக்கு அந்த
முயற்சிகள் என்னவென்று தெரியாமல் போகின்றன என அவர் சொன்னார்.




